கும்மிடிப்பூண்டி,டிச. 31- கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்தவர் முரளிமோகன். இவரது மனைவி மோகனலட்சுமி. இவர்களது மகன் எம்.ஜித்தேந்தரசாய். இவர் தனியார் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். கும்மிடிப்பூண்டியில் இயங்கிவரும் சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பயிற்சி பெற்று வருகிறார். இவர் ஒரு நிமிடத்தில் 45 முறை, கண்ட பேருண்டாசனத்தில், தரையில் உருண்டபடி உலக சாதனை படைத்தார். இவரது சாதனை, ‘இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்’, ‘வேல்ட் வைட் புக் ஆப் ரெக்கார்ட்’, ‘அசிஸ்ட் உலக சாதனை’ ஆகிய மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்துள்ளது. இதையடுத்து சாதனை படைத்த மாணவன் ஜித்தேந்தரசாய், அவரின் யோகா பயிற்சியாளர் சந்தியா, ஆகியோரை சக மாணவர்களும் பள்ளி நிர்வாகமும் பொதுமக்களும் பாராட்டினர்.