ராணிப்பேட்டை, மே 17-
ராணிப்பேட்டையில் தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழந்தார். மேலும் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராணிப்பேட்டையை அடுத்த சிப்காட் பகுதியில் தோல் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலை வளாகத்தில் உள்ள ரசாயன கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணி செவ்வாய்க்கிழமை (மே 16) இரவு நடை பெற்றது. இந்த பணியில் 8 தொழிலாளர்கள் ஈடுபடுபட்டிருந்தனர்.
அப்போது தமிழ்ச்செல்வன், மகேந்திரன், ராஜா, ராம்தாஸ் ஆகிய 4 பேர் ரசாயன கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய தொட்டியில் இறங்கி உள்ளனர். திடீரென தமிழ்ச்செல்வன் மயங்கி கீழே விழ அடுத்தடுத்து மகேந்திரன், ராஜா, ராமதாஸ் ஆகியோர் மயக்கம் அடைந்து விழுந்தனர்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்கள் தொட்டியில் மயங்கி விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் காவல் துறையினர் மயங்கியவர்களை மீட்டு வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் தமிழ்ச்செல்வன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் மற்ற மூவர் உயிர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தோல் தொழிற்சாலை ரசாயன கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.