காஞ்சிபுரம் மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை சீர் செய்யவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கோயில் நகரம், பட்டு நகரம் மற்றும் தொழிற்சாலை நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் தேவைகளுக்காக இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், பேருந்து போன்ற பொது போக்குவரத்து ஆகியவற்றின் மூலம் பயணித்து வருகின்றனர். காஞ்சிபுரம் மாநகரின் முக்கிய பகுதிகளான பேருந்து நிலையத்திலிருந்து காமராஜர் சாலை, காந்தி சாலை, விளக்கடி கோயில் தெரு, மேட்டு தெரு , கரிக்கினில் அமர்ந்தவள் கோயில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாள்தோறும் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் நகரின் முக்கிய பகுதிகளை கண்டறிந்து ஒரு வழிப் பாதையாக மாற்றியும் நெரிசல் குறைந்தபாடாக இல்லை. திருமணம் மற்றும் விசேஷ நாட்களில் கடும் போக்குவரத்து நிலவி வந்தது. அரசியல் கட்சிகள் நிகழ்வுகள் அனைத்தும் காந்தி சாலையில் நடைபெறுவதால் அவ்வப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் போக்குவரத்து துறை சாலைகளின் நடுவில் சாலை தடுப்புகள் அமைத்து வாகனங்கள் வரிசையில் செல்லவும் தேவையான இடங்களில் மட்டும் திரும்பும் வசதியை ஏற்படுத்தி அமைத்து தந்தது. ஆனால் வாகன ஓட்டிகள் சற்றும் சிரமப்படக் கூடாது என நினைத்துக் கொண்டு ஆங்காங்கே சாலை தடுப்புகளை விலக்கிக் கொண்டு செல்வதும், பிரதான சாலையில் கடை வைத்துள்ள உரிமையாளர்கள் தங்கள் கடைக்கு வாடிக்கையாளர்கள் வரவேண்டும் என சாலை தடுப்புகளில் இணைப்புகளை அகற்றிவிட்டு அங்கு ஆட்கள் செல்லும் வகையில் இடைவெளி அமைத்துக் கொள்கின்றனர். இதனால் ஆங்காங்கே வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சாலையை திடீரென கடப்பதால் விபத்துக்கள் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க ஒரு கட்டத்தில் அனைத்து சாலை தடுப்புகளையும் இணைத்து கம்பிகள் அமைத்து போக்குவரத்து காவல்துறை ஈடுபட்டு வந்தாலும், மீண்டும் கடை உரிமையாளர்கள் பொதுமக்கள் என அனைவரும் அதனை அகற்றி விட்டு ஒன்றும் தெரியாதது போல் இருந்து விடுகின்றனர். எனவே போக்குவரத்து சாலை தடுப்புகளில் உள்ள இடைவெளிகளை ஒழுங்குப்படுத்தி விபத்து இன்றி வாகனங்கள் செல்லவும் போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து நடக்க வேண்டும். இதன் மூலம் விபத்து இல்லா காஞ்சிபுரத்தை உருவாக்க முடியும். - கார்த்திக் லிங்கநாதன்