பூந்தமல்லி,ஜூன் 21-
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழ வரம், ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதி கரித்து இருந்தது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நேற்று 1649 கனஅடி வரை தண்ணீர் வந்தது.
இந்த நிலையில் புதனன்று மழை இல்லாததால் குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து தற்போது குறைந்து உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு இன்றைய காலை நிலவரப்படி நீர் வரத்து 545 கனஅடியாக குறைந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடி. இதில் தற்போது 19.83 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் 2562 மில்லியன் கன தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் சோழவரம், பூண்டி, புழல் ஏரிகளுக்கும் நீர்வரத்து சரிந்து உள்ளது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கனஅடி. இதில் 2239 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 781 கனஅடி தண்ணீர் வந்த நிலை யில் இது 328 கனஅடியாக குறைந்து இருக்கிறது. சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மி.கனஅடி. இதில் 403 மி.கனஅடி நீர் உள்ளது. ஏரிக்கு 115 கன அடி தண்ணீர் வந்த நிலையில் இது 36 கன அடியாக குறைந்து விட்டது. பூண்டி ஏரி யின் மொத்த கொள்ளளவான 3231 மி.கனஅடியில் 1320 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.