districts

img

பரங்கிமலை ரயில் நிலையத்தில் பெண் கொல்லப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பு

சென்னை, டிச.25- பரங்கிமலை ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை ரயில்முன் தள்ளி கொல்லப்பட்ட வழக்கில், வெள்ளியன்று (டிச.27) தீர்ப்பளிக்கப்படும் என சென்னை மகளிர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. சென்னை பரங்கிமலை காவலர் குடியிருப்பில் வசித்த கல்லூரி மாணவி சத்யபிரியாவும், அதே குடியிருப்பில் வசித்த சதீஷ் என்பவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில், பெற்றோர் எதிர்ப்பால் சதீஷுடன் பேசுவதை சத்யபிரியா நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதி, கல்லூரிக்கு செல்வதற்காக, பரங்கிமலை ரயில் நிலையம் வந்த சத்யபிரியாவை, ரயில் முன் தள்ளிவிட்டு  சதீஷ் கொலை செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றிய நிலையில் கைது செய்யப்பட்ட சதீஷ், இதுவரை பிணை கிடைக்கவில்லை என்பதால் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி முன்பு விசாரணைக்கு வந்தது. சிபிசிஐடி காவல்துறை தரப்பில் 70 சாட்சிகளிடம் விசாரணை செய்யப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை வரும் 27ம் தேதி அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.