சென்னை,ஜன. 22- கோயம்பேடு சந்தையை யொட்டியுள்ள பகுதிகளில் அடிக்கடி மோட்டார்சைக்கிள் திருட்டு, செல்போன் மற்றும் நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. மேலும் சந்தையில் கடை நடத்தி வரும் வியாபாரிகளையும் தாக்கி வழிப்பறி சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இதேபோல் சந்தை வளாகத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை, கள்ளச்சந்தையில் 24 மணி நேரமும் மது விற்பனை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடந்து வருவதாக தொடர்ந்து காவல்துறைக்கு புகார்கள் வந்தன. கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயம்பேடு சந்தை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த கூட்டுறவு ஊழியரிடம் ‘லிப்ட்’ கேட்டு ஏறிய வாலிபர் ஒருவர் திடீரென அவரது 6 பவுன் செயினை பறித்துக் கொண்டு மார்க்கெட் வளாகத்திற்குள் புகுந்து தப்பி ஓடிவிட்டான். இந்த நிலையில் கோயம்பேடு சந்தை பகுதியில் குற்ற சம்பவங்களை தடுத்திடும் வகையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு 30-க்கும் மேற்பட்ட போலீசார் மார்க்கெட் வளாகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பைக் திருட்டு, லாட்டரி விற்பனை உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் தொடர்புடைய 7 பேரை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இதன் தொடர்ச்சியாக சனிக்கிழமையும் மார்க்கெட் வளாகத்தில் சோதனை நடத்தினர். அப்போது கடைகளின் மொட்டை மாடி, கழிப்பறை மாடி உள்ளிட்ட பகுதிகளில் ஏறி ஆய்வு செய்து தீவிர சோதனை நடத்தினர். ஞாயிறன்று அதிகாலை 2-வது நாளாக காவல்துறையினரின் சோதனை நீடித்தது. கோயம்பேடு சந்தையில் உள்ள கடைகளில் தங்கி வேலை பார்த்து வரும் ஊழியர்கள், கூலி தொழிலாளர்கள் தவிர்த்து மார்க்கெட்டுக்கு சம்பந்தம் இல்லாத நபர்கள் ஏராளமானோரை கண்டுபிடித்து அவர்களை அங்கிருந்து வெளியேற்றினர். குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் நடமாட்டம் பற்றி தகவல் தெரிந்தால் வியாபாரிகள் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.