அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலம் குடியிருந்து வரும் மக்களுக்கு குடி மனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் வெள்ளியன்று (மே 6) திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. பல ஆண்டு காலமாக ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டும், பயன்படாத நீர்நிலைகளில் வசிப்பவர்களுக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும், நீர்நிலை ஓரம் வசிப்பவர்களுக்கு உரிய மாற்று இடம் வழங்க வேண்டும். கோயில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு வரைமுறைப்படுத்தி சுலப தவணையில் நிலத்தை பயனாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும். குடிமனை அற்ற குடும்பங்களுக்கு, மனை அல்லது அடுக்குமாடி குடியிருப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.சங்கர் தலைமையில் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாவட்டச் செயலாளர் பசு.பாரதிஅண்ணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு உள்ள அம்பேத்கர் சிலை அருகிலிருந்து ஊர்வலம் புறப்பட்டது.
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 3ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆட்சியரை சந்தித்து மனுக்களை வழங்கினர். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், நத்தம் புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு குடிமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.மற்ற புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களின் நிலை குறித்து அரசிற்கு தெரியப்படுத்தப்படும் என்றார். இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால் தலைமை தாங்கினார். கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ப.சுந்தரராசன், ஒன்றிய கவுன்சிலர்கள் பி.ரவி, எம்.ரவிக்குமார், மாளந்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் வி.விஜயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டக்குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்திற்க்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.சங்கர் தலைமையில் மாநிலக்குழு உறுப்பினர் இ.முத்துக்குமார் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். செயற்குழு உறுப்பினர்கள் கே.நேரு, பி.ரமேஷ், டி.ஸ்ரீதர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர், இருளர் இன மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்குவதற்கு ஆவணம் செய்வதாகவும், கோவில் மனையில் குடியிருப்பவர்கள் சம்பந்தமாக அரசுக்கு தெரிவிப்பதாகவும், வீடு இடிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தால் தற்கொலை செய்துக் கொண்ட சுபலட்சுமி குடும்பத்திற்கு நிவாரணம் அளிக்க மாவட்ட ஆட்சித்தலைர் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் உறுதியளித்தார். முன்னதாக ரங்கசாமி குளத்தில் இருந்து ஊர்வலமாக சென்று காஞ்சிபுரம் மாவட்டச் ஆட்சியர் அலுவலகம் அருகே காவலன் கேட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆவடி
அனைத்துவகை அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு நிலவகை மாற்றம் செய்து குடிமனைப் பட்டா வழங்க வேண்டும், நீதிமன்ற உத்தரவு என்ற பெயரால் ஏழை மக்களை நகரத்தை விட்டு வெளியேற்றக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன், வடசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் மா.பூபாலன், மாநகராட்சி கவுன்சிலர் ஏ.ஜான் ஆகியோர் ஆவடி வட்டாட்சியர் சிவக்குமாரிடம் மனு அளித்தனர்.