சென்னை, செப். 14 - காகிதம், மை, பிளேட் போன்ற மூலப்பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி வியாழனன்று (செப்.14) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அச்சகத் தொழிலில் மாநிலம் முழுவதும் அச்சகத் தொழிலில் சுமார் 12 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். இந்த தொழிலில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தனியாக நல வாரியம் அமைக்க வேண்டும், அச்சக தொழிலுக்கு தேவையான மூலப்பொருட் களை கூட்டுறவு அமைப்புகள் மூலம் தொழில் முனைவோர்களுக்கு வழங்க வேண்டும், 18 விழுக்காடு ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜெகடேவிடம், சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் தி.ஜெய்சங்கர், சென்னை அச்சக தொழில் புரிவோர் சங்கத்தின் (சிஐடியு) பொதுச் செயலாளர் எம்.சையத் அலிகோயா, பொருளாளர் ஏ.ஜோசப்செல்வன், துணைத் தலைவர் கே.மணிகண்டன் உள்ளிட்டோர் மனு அளித்தனர்.