புதுச்சேரி, நவ.6- சுதந்திர பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய வரும் மனிதாபிமானமற்ற தாக்குதலை கண்டித்து புதுச்சேரியில் ஆவேச ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுதந்திர பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் பெண்கள், குழந்தைகள் என்று அனைவரையும் கொன்று குவித்து வருவதை உடனடியாக நிறுத்த வேண்டும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் வெறியை முறியடிக்க இந்திய மக்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும். இந்திய வெளியுறவுக் கொள்கையை அமெரிக்காவிடம் அடமானம் வைத்துள்ள ஒன்றிய பாஜக அரசை கண்டித்து புதுச்சேரி சாரம் ஜீவானந்தம் சிலை எதிரே நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம் தலைமை தாங்கினார். மூத்த தலைவர் முருகன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், ராமச்சந்திரன் தமிழ்ச் செல்வன், சீனிவாசன், கொளஞ்சியப்பன், பிரபுராஜ், கலியமூர்த்தி, சத்தியா, இடைக்குழு செயலாளர்கள் மதிவாணன், ராம்ஜி, அன்புமணி, சரவணன், ராமமூர்த்தி மற்றும் விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சங்கர், வாலிபர், மாதர், மாணவர் சங்க தலைவர்கள் ஆனந்த், இளவரசி, பிரவீன் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக நெல்லிதோப்பு சுப்பையா சிலையிலிருந்து பெண்கள், மாணவர்கள் இஸ்ரேலின் அடாவடி காட்சிகளை பதாகைகளில் ஏந்தியவாறு ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.