ராணிப்பேட்டை, பிப். 18- ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த கீழ் வெண்பாக்கம் கிராமம் ஆதிதிராவிடர் காலனியில் சுமார் 1,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு யாராவது இறந்து விட்டால் அங்குள்ள ஏரி கால்வாய் மீது போடப்பட்டுள்ள சாலை வழியாக உடலை எடுத்து சென்று அடக்கம் செய்வது வழக்கம். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெய்த கனமழையின் போது ஏரி கால்வாய் மீது போடப்பட்டிருந்த சிமெண்ட் சாலை சேதமடைந்தது. மேலும் சாலையில் செடிகள் முளைத்து புதர் மண்டி கிடக்கிறது. இதனால் இங்கு இறப்பவர்களின் உடலை எடுத்துச் செல்ல வழி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் உடல்நலக்குறைவால் வெள்ளிக்கிழமை இறந்து விட்டார். அவரது உடலை எடுத்துச் செல்ல வழி இல்லாததால் வயல்வெளியில் பிணத்தை சுமந்து சென்று அடக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக சுடுகாட்டுக்கு பாதை அமைத்துத் தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.