districts

img

கோவில் அடிமனை வாடகைதாரர்களை கண்ணியமாக நடத்த வேண்டும்

சென்னை, ஏப். 20 - கோவில் அடிமனை வாடகைதாரர் களை கண்ணியமாக நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அடி மனை பயனாளிகள், குத்தகை விவ சாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் வலியுறுத்தியுள்ளார். கோவில் நிலங்களில் குடி யிருப்போருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அநியாய வாடகையை திரும்ப பெற வேண்டும். நீண்டகாலமாக குடி யிருப்போரை ஆக்கிரமிப்பாளர் என  மிரட்டுவதை கைவிட வேண்டும், கோவில் மனைகளில் சிறுதொழில் செய்வோரை தொந்தரவு செய்யக் கூடாது, வாரிசுகளுக்கு நிலத்தை பெயர் மாற்றம் செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதனன்று (ஏப்.19) நுங்கம்பாக்கத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அநியாய வாடகை

இந்தக் கூட்டத்தில் சாமி.நடராஜன் பேசுகையில், “திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதற்கு மாறாக துறை அதிகாரிகள் நடந்து கொள்கின்றனர். கோவில் நிலங்களில் வசிப்போரையும், ஆக்கிரமித்து வணிகம் செய்வோரையும் ஒரே சம மாக நடத்தக் கூடாது. திமுகவை ஆட்சி பொறுப்புக்கு கொண்டு வந்த மக்களை கொச்சைப்படுத்தும் வகையில், குடியிருப்பு பகுதிகளில் வாடகை பாக்கி பட்டியலை பேனராக வைத்துள்ளனர். அதனை அகற்ற வேண்டும். நியாய வாடகை என்ற பெயரில் அநியாயமாக உயர்த்தப்பட்ட வாடகையை ரத்து செய்ய வேண்டும் என்றார். கோவில்களுக்கு உள்ள நிலங்கள் அனைத்தும் மக்கள் வழங்கியவை. கோவில் நிலத்தில் வீடுகட்டி மக்கள் வசித்து வருகின்றனர். அடிமனைக்கு வாடகை நிர்ணயிப்பதற்கு பதி லாக, சொந்த உழைப்பில் கட்டிய கட்டிடத்திற்கும் சேர்த்து வாடகை நிர்ணயிப்பதை ஏற்க முடி யாது. 20 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்து அரசு போதிய கவனம் செலுத்தாமல் உள்ளது.

பிரிவு 34ஐ பயன்படுத்து!

அறநிலையத்துறை சட்டம் - 1959, பிரிவு 34ஐ பயன்படுத்தி கோவில் மனைகளில் வசிப்போருக்கு அந்த நிலங்களை சொந்தமாக்க வேண்டும். ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு இலவசமாகவும், வருவாய் உள்ளவர்களுக்கு நியாய விலையில், தவணை முறையில் தொகையை பெற்றுக் கொண்டு குடி மனைப் பட்டா வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில், கோவில் மனையை பயன்படுத்துவோருக்கு சாதகமான எந்த அறிவிப்பும் வரவில்லை. எனவே, மீண்டும் போராடும் நிலையை உருவாக்கி உள்ளனர் என்றும் அவர் கூறினார். கூட்டத்திற்கு சங்கத்தின் மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் வி.செந்தில்குமார் தலைமை தாங்கி னார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, சங்கத்தின் மாநிலத் தலை வர் வி.செல்வம், மாவட்டச் செய லாளர்கள் கே.முருகன் (மத்திய சென்னை), எம்.நடராஜன் (தென்சென்னை), நிர்வாகிகள் எஸ்.கோபாலகிருஷ்ணன், கே.சேகர், கே.மணி உள்ளிட்டோர் பேசினர்.