districts

img

முதலீடுகளை ஈர்க்கும் தமிழகம், பாதுகாப்பான வேலைக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்

கல்வி, தொழில், வேலை வாய்ப்பு, மருத்துவம் என பல்வேறு துறைகளில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.  இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து ஓரிரு ஆண்டுகள் ஆகியிருந்தது. ஒன்றிய அரசு நாட்டில் அனைத்து துறைகளையும் வளர்த்தெடுக்கும் பணியில் இருந்தது. குறிப்பாக தொழில் துறையை மேம்படுத்த பல்வேறு ஆலைகளை தொடங்கியது. அந்த ஆலைகள் எல்லாம் சொல்லி வைத்தாற்போல் மும்பை போன்ற நகரங்களுக்கு சென்றன. அப்போதைய மதராஸ் மாகாண மான இங்கு கை ராட்டைகள் வழங்கிய ஒன்றிய அரசு, மும்பைக்கு நூற்பு ஆலைகளை வழங்கியது. ஆரம்பம் முதலே இந்த பாரபட்சம் இருந்தது. வட இந்திய மாநிலங்கள் பலவற்றை விடவும் அப்போதைய மதராஸ் மாகாணம் மிக மோசமான நிலை யில் இருந்தது.  இன்று தமிழ்நாடு இந்திய அளவில் எந்த மாநிலத்தையும் தனது போட்டியாக கருதாமல் பிற நாடுகளுடன் போட்டி போடும் அளவுக்கு 2030க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியடைய வேண்டும் என்று தனது இலக்கை நிர்ணயித்து பயணித்துக் கொண்டிருக்கிறது. 2021ஆம் ஆண்டு திமுக அரசு ஆட்சியமைத்ததிலிருந்து இதுவரை நடத்தப்பட்ட பல்வேறு முதலீட்டு மாநாடுகள் வாயிலாக 192 புரிந்து ணர்வு ஒப்பந்தங்கள் மூலம் தமிழ கத்துக்கு ரூ.2.2 லட்சம் கோடி முத லீடுகள் கிடைத்துள்ளன. சுமார் 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான சூழல் உருவாகி யுள்ளது.  “உற்பத்தி மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சியில் அதிகமான தனியார் மற்றும் பொதுத்துறை முதலீட்டை ஈர்க்க வேண்டும், தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தொழில் துறை வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் நீடித்த பொருளாதார வளர்ச்சியினை அடைந்து, அதிக அளவில் வேலை வாய்ப்புகளை உரு வாக்கித் தந்து தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திட வேண்டும்” என்பதைத் தான் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையில் தமிழக அரசு தனது கொள்கையாக கொண்டுள்ளது.

தொழில் முதலீட்டாளர்கள் நமது மாநிலத்தை தேடி வர வேண்டுமென்றால் அவர்கள் எதிர்பார்க்கும் பல்வேறு அம்சங்கள் இருக்க வேண்டும். தமிழகத்தில் 4 பெரிய பன்னாட்டு விமான நிலையங்கள், 2 உள்நாட்டு விமான நிலையங்கள், 3 பெரிய துறைமுகங்கள், 19 சிறிய துறைமுகங்கள் உள்ளன. 2  லட்சத்து 53 ஆயிரத்து 510 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைவழி வசதி உள்ளது. இதனாலே முதலீட்டாளர்களும், ஏற்றுமதியாளர்களும் மிகவும் விரும்பும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. இதைவிட மிக முக்கியாமன அம்சம், தமிழ்நாடு 80 விழுக்காடு கல்வி அறிவு பெற்ற மாநிலமாகத் திகழ்கிறது. திறமைவாய்ந்த சிறந்த தொழில்நுட்ப பணியாளர்களையும் கொண்டுள்ளது. இத்தகைய தனித்தன்மையின் காரணமாக பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தை நோக்கி படையெடுக்கின்றன. ஜவுளித்தொழில், மின்சாதனப் பொருள்கள் உற்பத்தியில் அடுத்தகட்ட பாய்ச்சலை நிகழ்த்துவதற்கான செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. உற்பத்தித் துறையைவிட சேவைத் துறையில் கவனம் செலுத்தினால்தான் பெரிய அளவிலான வளர்ச்சி பெற இயலும் என கூறப்படும் நிலையில் உற்பத்தித் துறை மற்றும் சேவைத் துறை ஆகிய இரண்டிலுமே முன்னணியில் இருக்க பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.  கடந்த மார்ச் மாதம் தொழில்நுட்பம், தொழில்முனைவோர் மற்றும் திறன் மேம்பாட்டு உச்சி மாநாட்டினை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “சென்னை, கோயம்புத்தூர் மற்றும் ஓசூர் ஆகிய பகுதிகளிலே டெக் சிட்டி என்று அழைக்கப்படும் தமிழ்நாடு தொழில்நுட்ப நகரங்களைத் தமிழ்நாடு அரசு தொடங்கவுள்ளது. இந்த தொழில்நுட்பநகரங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களையும் நிதி நிறுவனங்களையும் புதிதாகத் தொழில் தொடங்கும் முனைவோர்களையும் ஒன்றிணைக்கக் கூடிய மையங்களாக விளங்கப் போகின்றன.

அனைத்து தொழில்துறைகளின் பங்களிப்போடு 2030-க்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை எட்ட வேண்டும் என்று நாம் தீர்மானித்துக் கொண்டிருக்கிறோம். மென்பொருள் சேவையைப் பொறுத்தவரையில், அத்துறையிலே உலகளாவிய வகையில் நாம் முதன்மை இடத்திலிருக்கிறோம். இந்தியாவில் அத்துறையில் பெரும்வெற்றியைப் பெற்ற நிறுவனங்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கின்றன. தமிழ்நாடு, தகவல் தொழில்நுட்பத் துறையிலே ஆசியாவிலேயே மிகப்பெரிய தொழில் மையமாக உருவெடுக்கும்” என்று கூறினார். அரசு ஈர்த்துள்ள தொழில் முதலீடுகள் மூலமாக உருவாகும் புதிய நிறுவனங்களில் பணியாற்ற தமிழக இளைஞர்கள் கல்லூரிகளில் தயாராகி வருகின்றனர். மாணவர்கள் கல்லூரிகளில் கற்பதற்கும், நிறுவனங்களில் எதிர்பார்ப்பதற்கும் நிறைய இடைவெளி இருப்பதை உணர்ந்த தமிழக அரசு நான் முதல்வன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு அதனை மேலும் ஊக்குவிப்பது இந்த திட்டத்தின் நோக்கமாக உள்ளது. அடுத்தடுத்து அவர்கள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படிப் படிக்கலாம் என்றும் வழிகாட்டப்படுகிறது.

அதே நேரத்தில் முதலீடுகள் அதிகளவில் தமிழகத்தில் குவிந்தாலும் அதற்கேற்ப வேலைவாய்ப்புகள் உருவாக வேண்டும். பல்லாயிரம் கோடியில் தொடங்கப்படும் பன்னாட்டு நிறுவனங்களில் உரிய ஊதியம் வழங்கப்படவேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோருகின்றனர். மேலும் ஒப்பந்த பணி என்ற பெயரில்  நியமிக்கப்படும் தொழிலாளர்களுக்கு குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது. சில நிறுவனங்கள் பயிற்சியாளர்களை நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்துகின்றன. இதனால் சிலநேரங்களில் விபத்துக்களும் நிகழ்கின்றன. உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் நிலையான, முறையான வேலை வாய்ப்பு  குறைவது, தொழிலாளர் சந்தையில் நெருக்கடியை ஏற்படுத்துகிறது.  செயலி வழித் தொழிலாளர் (கிக் தொழிலாளர்) நியமனம், பயிற்சியாளர் அல்லது பழகுநர் அல்லது குறிப்பிட்ட கால வேலை என பணி உறவுகள் மாறுகிறது. கூடவே அவுட்சோர் சிங் மற்றும் காண்ட்ராக்ட் மயமும் அதிகரித்து, வேலைவாய்ப்பின் தரம் மற்றும் சம்பளம், உரிமைகள் சீர்கேடு அடைகிறது. எனவே முதலீடுகள் அதிக வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதாகவும் அது தொழிலாளர்களுக்கு அனைத்து உரிமைகளுடன் கூடிய பாதுகாப்பான வேலை வாய்ப்பாகவும் இருக்கவேண்டும்.