districts

ஜனாதிபதி பதவிக்குகூட தேர்தல் உண்டு; இவர்களுக்கு இல்லை ரயில்வே அர்பன் வங்கியில் 33 ஆண்டுகளாக தொடரும் மோசடி

சென்னையில் உள்ள ரயில்வே தொழிலாளர் கூட்டுறவு நாணய சங்கம் 1907 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் தேதி ஏற்படுத்தப்பட்டது. இந்த சங்கத்தை ரயில்வே தொழி லாளர்கள் சுருக்கமாக அர்பன் வங்கி என அழைக்கிறார்கள். கடந்த 35 ஆண்டு களுக்கும் மேலாக இந்த சங்கத்தில் பல்வேறு முறைகேடுகளும் ஊழல்களும் நடை பெற்று வருவதாக தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன. இதனை எதிர்த்து சொசைட்டியின் உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையிலும் கூட்டாகவும்  ரயில்வே தொழிற்சங்கங்களும் பல புகார்களை ஒன்றிய அரசின் பல மாநில  (மல்டி ஸ்டேட்) கூட்டுறவுச் சங்கத்தின் மத்திய பதிவாளருக்கும் மாநில அரசின் கூட்டுறவுத்துறைக்கும் அனுப்பினர்.

1989ம் ஆண்டு முதல் கடந்த  33 ஆண்டுகளாகத் தேர்தலே நடத்தாமல், தேர்தல் நடத்துவதாகப் போலியாக தஸ்தாவேஜூக்களை தயாரித்து மத்திய பதிவாளரை  சரிக்கட்டவேண்டிய முறை யில் சரிக்கட்டி தற்போதுள்ள இயக்குநர் குழு தொடர்ந்து பதவியில்  நீடித்து வரு கிறது. சொசைட்டியின் டிவிடென்ட் பணத்தைப் பங்குதாரர்களான ரயில்வே தொழிலாளிக்குப் பட்டுவாடா செய்யும்  போது வெள்ளைத்தாளில் கையெழுத்து பெற்றுக்கொண்டு அதன்பிறகுதான் டிவிடென்ட் பணம் வழங்கப்படுகிறது.  இந்த நடைமுறை கடந்த 30 ஆண்டு களாக நடைபெற்று வருகிறது.  அப்படி வெற்று காகிதத்தில் பெறப்பட்ட  கையெழுத்துகளை வைத்து சங்கத்தின் அமைப்பு விதிகளை தங்கள் விருப்பம் போல் திருத்திக்கொண்டனர்.   சொசைட்டியின் பொது மகாசபையில் இவை அனைத்தும்  ஏகமனதாக நிறை வேறியது போலவும், சொசைட்டியின் இயக்கு நர் மற்றும் மன்ற பிரதிநிதிகளுக்கான (ஆர்.ஏ.மெம்பர்) தேர்தல்கள் நடைபெற்றது போலவும் அதற்குச் சாட்சியாக  போலி யாக சில ஆவணங்களைத் தயார் செய்து மத்திய பதிவாளருக்கு அனுப்பி வரு கின்றனர். கடந்த 35 ஆண்டுகளாக இந்த பாணியில் தான் இந்த தேர்தலை நடத்தி  அர்பன் வங்கி சேர்மன் மற்றும் அவரது கையாட்களே இயக்குநர்களாகவும், ஆர்.ஏ. உறுப்பினர்களாகவும்  தங்களை தாங்களே நியமித்துக் கொள்கிறார்கள்.

பெயர் தெரியாத  பத்திரிகையில் விளம்பரம் 

 சொசைட்டியின் தேர்தலுக்கான அறி விப்பைத் தமிழ், ஆங்கிலம்,  தெலுங்கு, கன்னடம், `ஹிந்தி உட்பட பன்மொழிகளில் முன்னணி பத்திரிகைகளில் விளம்பரம் கொடுப்பதில்லை. ஏதோவொரு பெயர் தெரியாத விற்பனை ஆகாத பத்திரிகையில் விளம்பரம் கொடுத்து மொத்த பத்திரி கையையும் அவர்களே வாங்கி வைத்துக் கொள்வார்கள். பத்திரிகையில் விளம்பரம் கொடுத்து அனைவருக்கும் தேர்தல் குறித்த அறிவிப்பைத் தெரிவித்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி இதையே அத்தாட்சியாக மத்திய பதிவாளருக்கு அனுப்பி வைக்கிறார்கள். ரயில்வேயின் 55,000 உறுப்பினர்கள் வேலை செய்யும் டிப்போக்களில் நோட்டீஸ் ஒட்டுவதோ அல்லது தேர்தலுக்கான அறிவிப்பு தகவலையோ வெளியிடுவதில்லை.  

கடைசியாக நடைபெற்ற தேர்தல் 

 ரயில்வே தொழிலாளர்களான சொசைட்டி உறுப்பினர்கள் கடைசியாக 1989ல் நடைபெற்ற அர்பன் வங்கி தேர்தலில், ரயில்வேயின் டிப்போக்கள் உள்ளே வைக்கப்பட்ட வாக்குப் பெட்டிகளில் வாக்க ளித்ததுதான் கடைசியாக நடைபெற்ற தேர்தல். அதன்பிறகு இன்று வரை கடந்த 33 ஆண்டுகளாக உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பே வழங்கப்பட வில்லை. நமது நாட்டின் மிக உயர்ந்த பதவியான குடியரசுத் தலைவர், குடியரசு துணைத்தலைவர்  பதவிக்குக் கூட தேர்தல் நடைபெறுகிறது.  சட்டமன்ற நாடாளு மன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களை மக்கள் ஜனநாயக முறைப்படி வாக்களித்துத் தேர்வு செய்கி றார்கள்.  ஆனால், ரயில்வே தொழிலாளர் கூட்டுறவு நாணய சங்கத்திற்கு தேர்தலே நடத்தாமல்  தேர்தல்கள் முறையாக நடத்தியதாகப் போலி ஆவணங்களைத்  தயார் செய்து ஒன்றிய அரசின் மத்திய கூட்டுறவு பதிவாளருக்கு அனுப்பி வாங்க வேண்டிய விதத்தில் ஒப்புதல் வாங்கிக் கொள்கின்றனர். தற்போது ஆர்.ஏ.மெம்பர் தேர்தல் (நடத்தாமலே) நடத்தி விட்டதாகவும், ஜனவரி 29ல் இயக்கு நர் தேர்தல் நடத்தப் போவதாகவும் அறி வித்துள்ளனர்.  55,000 உறுப்பினர்கள் வாக்களித்து 600 ஆர்.ஏ.மெம்பர்களுக்கு தேர்தல் நடைபெறவேண்டுமானால் ரயில்வேயில் சுவரொட்டி, பேனர், பிரச்சாரம் எனத்  தேர்தல் திருவிழாக்கோலம் கொண்டி ருக்கும். ஆனால் கடந்த  33 ஆண்டுகளாக அப்படி ஏதும் நடைபெறவில்லை.  

தடையுத்தரவால் தப்பி பிழைத்தவர்கள்

தென்னிந்தியாவில் ரயில்வே தொழி லாளர்களுக்காகப் போராடி வரும் தட்சின ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டி.ஆர்.இ.யு) அளித்த புகாரின் அடிப்படையில் பல ஆண்டுகளுக்கு  முன்பு தமிழக கூட்டுறவுத்துறையின் இணைப்பதிவாளர் சித்திரசேனன் ரயில்வே  அர்பன் வங்கியின் முறையற்ற தேர்தல் மற்றும் கன்ஸ்யூமர் லோன் வழங்கியதில் நடைபெற்ற கோடிக் கணக்கான ரூபாய் ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த  உத்தரவிட்டார். விசாரணை முடியும் வரை  அர்பன் வங்கியை  மூடி சீல் வைக்கச் சொன்னார். ஆனால் நிர்வாகத்தில் இருந்தவர்கள் உயர்நீதிமன்றத்தை நாடி,  இது பல மாநில கூட்டுறவுச் சங்கம், இதில் மாநில அரசின் கூட்டுறவுத்துறை தலையிட முடி யாது,  ஒன்றிய அரசின் மத்திய கூட்டுறவு பதிவாளர்தான் தலையிடமுடியும் என்று தடை உத்தரவு பெற்றனர். 

டி.ஆர்.இ.யு நிர்வாகிகள்மீது தாக்குதல் 

ஒருமுறை சென்னை வந்த மத்திய பதிவாளரை  டி.ஆர்.இ.யு நிர்வாகிகள் சந்தித்து மேற்சொன்ன குற்றச்சாட்டுகளை புகாராக அளித்தனர். 1992ல் அர்பன் வங்கி ஊழல்களை எதிர்த்தும் சொசைட்டியின் அமைப்புச்சட்டங்கள் மாற்றப்பட்டதை எதிர்த்தும் டிஆர்இயு போராட்டங்கள் நடத்தியது. அப்போதும் ரவுடி பட்டாளத்தை வைத்து டி.ஆர்.இ.யு. தோழர்கள் மீது செங்கற்களையும்,  டியூப் லைட்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தினர். 

வேலைக்கு ஆள் எடுப்பதிலும் முறைகேடு

55 ஆயிரம் ரயில்வே தொழிலாளர் களைப் பங்குதாரர்களாகக் கொண்ட இந்த சொசைட்டியில் 350 ஊழியர்கள் பணிபுரிந்தால் போதுமானது. ஆனால், 1200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்கிறார்கள். அரசு அதிகாரிகளின் சிபாரிசுகளில் வந்தவர்கள் சிலர்,  ஊடகங்க ளில் பணிபுரிபவர்களின் சிபாரிசுகளில் வந்த வர்கள் சிலர், காவல் மற்றும் நீதித்துறை யின் சிலரின் உறவினர்கள் மூலமும், மீதமுள்ளவர்கள் பணம் கொடுத்தும் வேலைக்கு வந்தவர்கள் ஆவர். பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து சொசைட்டியின்  காலிப் பணி யிடங்களை நிரப்பவில்லை. நேர்முகத் தேர்வோ, அல்லது எழுத்துத் தேர்வோ ஏதுவும் நடைபெற்றதில்லை. தேர்வு செய்யப்பட்டவர்களின் கல்வித்தகுதியும் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை.  தமிழ்நாடு வேலை வாய்ப்பு அலுவ லகத்திற்கும் தெரியாமல் ஆட்களை நியமித்தனர். 

கண்டு கொள்ளாத சிபிஐ 

 தமிழ்நாடு அரசு  இட ஒதுக்கீட்டுச் சட்டத்தின் படி எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி.பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டு முறை எதுவும் பின்பற்றப்படவில்லை. சொசைட்டியின் சேர்மன் முதல் இயக்குநர்கள் வரை பல கோடி ரூபாய் ஊழல் புரிந்துள்ளதாகச்  சென்னை சாஸ்திரி பவனில் உள்ள  சிபிஐ அலுவலகம் முன்பு  டி.ஆர்.இ.யு போராட்டம் நடத்தி புகார் மனுக்களை அளித்தது. எப்போதும்போல் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியவர்கள் தலையிடவே இல்லை.  பணிநியமனம் செய்வதற்கு வசதியாக 20க்கும் மேற்பட்ட சொசைட்டி கிளைகள் ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா வரை திறக்கப்பட்டுள்ளது. ஊழியர்களைப் பழிவாங்க வேண்டுமென்றால் ஆந்திரா மற்றும் கர்நாடகா கிளைகளுக்கு இடமாற்றல் உத்தரவு வழங்கப்படும். அவர்கள் மீண்டும் சென்னை வரவேண்டுமென்றால் பல ஆயிரக்கணக்கான ரூபாய் லஞ்சம்  கொடுத்தால்தான் இடமாற்றல் உத்தரவு வழங்கப்படும். முறையான இடமாற்றல் குறித்த கொள்கை என்பது சொசைட்டியில் இல்லை. 

பெண்  ஊழியருக்கு  பாலியல் துன்புறுத்தல்

சொசைட்டியில் பணிபுரியும் ஊழியர் களைத் தாக்குவது என்பது பலமுறை நடந்துள்ளது. அதனால் சிலர் ராஜினாமா செய்துவிட்டனர்.  சொசைட்டி ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாககேசரி என்ற முன்னாள் மேலாண் இயக்குநர், ஸ்ரீலதா என்ற பெண் ஊழி யருக்கு  பாலியல் தொல்லை தந்தார். காவல்துறையில் புகார் அளித்தும்  நட வடிக்கை  எடுக்கவில்லை. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தலையிட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பின்னர் தான் தேசிய மகளிர் ஆணையம் தலை யிட்டு நாககேசரி மீது நடவடிக்கை எடுத்து வெளியேற்றியது. ஆனால் புகார் தெரிவித்த பெண் ஊழியரைத் தற்காலிக பணிநீக்கம் செய்து 22 ஆண்டுகளாக  வேலைக்கு எடுக்காமல் அர்பன் வங்கி நிர்வாகம் பழிவாங்கி வருகிறது.

தமிழக கூட்டுறவுத்துறை  தணிக்கை தேவை

55 ஆயிரம் ரயில்வே தொழிலாளர்களை  உறுப்பினர்களாகக் கொண்ட சொசைட்டி யில் மாதாந்திர லாபமே 9.25 கோடி ரூபாய்க்கும் மேல் ஆகும். வருடாந்திர லாபம் 111 கோடி ரூபாய்க்கு மேல்.  மொத்த டர்ன் ஓவர் 6121 கோடி ரூபாய் என அவர்கள் வைத்த தனியார் தணிக்கை நிறுவன அறிக்கையே கூறுகிறது.   33 ஆண்டு களாக ஒரே தலைமை, ஒரே ஆளும் நிர்வாகக்குழு சொசைட்டியை கைப்பற்றி வைத்துக்கொண்டுள்ளதற்கு இதுவே காரணம்.  தமிழக கூட்டுறவுத்துறையின் தணிக்கை நடைபெற்றிருந்ததை ரத்து செய்துவிட்டு தங்களது விருப்பப்படி  நியமிக்கும் தனியார் நிறுவனத்தின் தணிக்கைக்கு சொசைட்டி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தனர். இதனால்  முறையான கணக்கு வழக்குகளின்றி முறை கேடுகளும் ஊழல்களும் இஷ்டத்திற்கு நடைபெற்று வருவதாக தொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.  சொசைட்டியின் கணக்குகளில்  தமிழக அரசு தலையிட்டு தணிக்கை செய்யவேண்டும். 

 சுரண்டல் திட்டம்


 அவர்களே நியமித்த இறுதி தணிக்கை  அறிக்கையில் 126 கோடி ரூபாய் மொத்த லாபம் என அறிவித்துள்ளனர். அதில் ரிசர்வ் பன்ட் 31 கோடி ரூபாய் எனவும், 12 கோடி ரூபாய் எதிர்பாராத செலவுகளுக்கான ரிசர்வ் பன்ட் எனவும் ஒதுக்கி உள்ளனர். இவை போக அவர்கள் காட்டக்கூடிய லாபம் 80 கோடி ரூபாய். 80 கோடி ரூபாயும் 55,000 பங்குதாரர்களுக்கு டிவிடென்ட்டாக பிரித்துக் கொடுக்கப்படவேண்டும். ஆனால், கொடுத்த டிவிடென்டோ 28 கோடி ரூபாய்தான். அப்போதும் மீதம் 52 கோடி சொசைட்டி வசம் உள்ளது. இதில் பில்டிங் பன்ட், காமன் பன்ட், டிவிடென்ட் ஈக்வலைசேஷன் பன்ட், பேட்டர்னேஜ் போனஸ், வி.ஆர்.எஸ். பன்ட் என 50 கோடி ருபாயை ஒதுக்கி உள்ளனர். இந்த 50 கோடி ரூபாயில்தான் மர்மம் உள்ளது. 

செல்லூர் ராஜூ தனிச்செயலர் தேர்தல் அதிகாரியா?

 முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் தனிச்செயலராக இருந்த ஓய்வு பெற்ற தமிழக கூட்டுறவுத்துறை அதிகாரி டாக்டர் எம்.ராஜசேகரை தேர்தல் அதி காரியாக நியமித்து இயக்குநர் பதவிக்கான தேர்தல் ஜனவரி 29 அன்று சேத்துப்பட்டு உலக பல்கலைக் கழக சேவை மையத்தில் நடைபெறும் என்று  டிரினிட்டி மிரர் என்ற ஆங்கில மாலை நாளிதழில் மட்டும் விளம்பரம் கொடுத்துள்ளனர். முன்னணி தமிழ், ஆங்கில பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கவில்லை. ரயில்வே நிர்வாகத்திற்கோ அல்லது சொசைட்டி உறுப்பினர்கள் பணிபுரியும் இடங்களிலோ டிப்போக்களிலோ தேர்தல் அறிவிக்கை வெளியிடப்படவில்லை. 600 ஆர்.ஏ. உறுப்பினர்களுக்கான தேர்தல் நடந்து முடிந்துவிட்டதாகவும் அவர்களிலிருந்து இயக்குநர்களைத் தேர்வு செய்யும் தேர்தல் வரும் 29 ஆம்தேதி எம்.ராஜசேகரன் தலைமையில் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.  ஆர்.ஏ.மெம்பர் தேர்தல் நடத்த வேண்டும் என்று சொசைட்டி உறுப்பினர்கள் கடந்த டிசம்பர் மாதமே மத்திய பதிவாளர் வரை புகார் அளித்துள்ளனர். ஆனால், தேர்தல் நடத்தாமல் சொசைட்டி உறுப்பினர்கள் வாக்களிக்காமல் ஆர்.ஏ.மெம்பர்கள் 600 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அவர்கள் ஜனவரி 29ம் தேதி இயக்குநர்களைத் தேர்ந்தெடுக்கப் போவதாகவும் அறி வித்திருப்பது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். ஒன்றிய அரசின் மத்திய பதிவாளர் தலையிட்டு நேர்மையான முறையில் ஆர்.ஏ.உறுப்பினர் தேர்தல் நடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்,  தமிழக அரசின் கூட்டுறவுத்துறை தலையிடவேண்டும்,  மேலும் அர்பன் வங்கி யில் பணிபுரியும் ஊழியர்கள் நலன் மற்றும்  55 ஆயிரம் சொசைட்டி உறுப்பி னர்களின் பணத்தைப் பாதுகாக்கத் தமிழக முதலமைச்சர் தலையிட்டு  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ரயில்வே தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் 

 மேற்கண்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி ரயில்வே தொழிலாளர்கள் பெரு மளவில் திரண்டு ஜன. 25 (புதன்) அன்று மாலை 5.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு மாபெரும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.