சென்னை, டிச.19- கேரளாவைச் சேர்ந்த 16 வயது சிறுவனுக்கு சென்னையில் கீமோதெரபி மூலம் முழுமையான நுரையீரல் உறைநீக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தரமணியில் உள்ள அப்போலோ புரோட்டான் புற்றுநோய் சிகிச்சை மையத்தில் இந்த சிகிச்சை நடைபெற்றது. இந்த சிறுவனுக்கு ஏற்கனவே புற்றுநோய் இருந்து அதற்காக அறுவை சிகிச்சை , கதிரியக்க அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் யு-விங் சர்கோமா என்ற அரிதான புற்றுநோயால் அவர் மீண்டும் பாதிக்கப்பட்டார். எலும்பு மற்றும் அதை சுற்றியுள்ள மென் திசுக்களில் ஏற்படும் இந்த புற்றுநோயால் அவருக்கு நெஞ்சகப்பகுதியிலும் நுரையீரல் பகுதியிலும் தீவிரமான புற்றுநோய் கட்டிகள் உருவாகியிருந்தன. இதையடுத்து புற்றுநோயின் தீவிரத்தை குறைக்க மருத்துவமனையின் நெஞ்சக புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் ரோபோடிக் அறுவைசிகிச்சை நிபுணர்களான காதர் உசேன், அபிஜித் தாஸ் ஆகியோர் தலைமையிலான குழுவினர் அதிவெப்பநிலை நெஞ்சக இடையீட்டு கீமோதெரபி சிகிச்சை அளித்தனர். அதனுடன் நுரையீரல் பகுதியில் உறைந்திருந்த புற்றுநோய் கட்டிகளையும் அறுவை சிகிச்சை மூலமாக கண்டறிந்து அகற்றினர். அவருக்கு மீண்டும் இந்த பாதிப்பு வாராத வகையில் தொடர் மருத்துவ கண்காணிப்பும் சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன. இதனால் அவர் விரைவாக இயல்பு நிலைக்கு திருப்பினார் என்று அப்போலோ புரோட்டன் மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி ஹரீஷ் திரிவேதி கூறினார்.