விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், அனுமந்தை ஊராட்சியில் பூம்பூம் மாட்டுக்கார பழங்குடியின இனத்தை சேர்ந்த 12 குடும்பங்கள் பல ஆண்டுகாலமாக வசித்து வருகின்றன. சொந்த வீடு இல்லாமல் குள புறம்போக்கு நிலத்தில் குடிசை போட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் பருவ மழைக் காலத்தில் தங்குவதற்கு இடம் இல்லாமல் அல்லல்படுகின்றனர். தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக, குடிசைக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் அந்த மக்கள் நிற்பதற்குகூட இடமில்லாமல் பரிதவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட அந்த மக்களை சந்தித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் வி. அர்ச்சுனன், வட்டச் செயலாளர் கே. ராஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டிவனம் வட்டச் செயலாளர் டி.ராமதாஸ் ஆகியோர் ஆறுதல் கூறினர். தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள பழங்குடி இன மக்களுக்கு நிவாரணமும், வீட்டு மனைப் பட்டாவும் விரைந்து வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.