சென்னை, மார்ச் 18- சென்னை ஷெனாய் நகர் திருவிக பூங்கா நிலத்தடியில் மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பதற்காக கடந்த 2011ஆம் ஆண்டு மூடப்பட்டது. தொடர்ந்து, பூங்காவில் நடை பாதைகள், ஸ்கேட்டிங் ரிங்க், பேட்மிண்டன் மைதானம், குழந்தைகள் விளையாடும் பகுதி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு ஒரு மாதத்தில் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், பூங்கா சீரமைப்பு குறித்து இந்த பகுதி மக்களால் நடைபெறும் வழக்கு நீதிபதி தண்டபாணியிடம் விசாரணைக்கு வந்த போது, சிஎம்ஆர்எல் நிறுவனம் நூற்றுக்கணக்கான நன்கு வளர்ந்த பழமையான மரங்களை வெட்டி அகற்றியுள்ளதாகவும், அயல்நாட்டு மரங்கள் அனைத்தும் தேவையில்லாமல், வெட்டி அகற்றப்பட்டுள்ளதாக ஓய்வு பெற்ற நீதிபதி கே.பி.சிவசுப்பிரமணியம் கடிதத்தில் அதிருப்தி தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து நீதிபதி சனிக்கிழமை (மார்ச் 18) நேரில் ஆய்வு செய்தார். அப்போது, மெட்ரோ ரயில் அதிகாரிகள் முகமது சித்திக், ஸ்ரீ வஸ்தவா உள்ளிட்ட நிர்வாகிகள் நீதிபதியின் கேள்விக்கு பதிலளித்தனர். தொடர்ந்து, மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் உதவும் வகையில் என்னென்ன மரங்களை, செடிகளை நட முடியுமோ அவற்றை நட ஏற்பாடு செய்ய நீதிபதி மெட்ரோ நிர்வாகிகளிடம் அறிவுறுத்தினார்.