கடலூர், ஜூன் 13-
மகளிர் காவல் துறையின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு சென்னை முதல் கோடியக்கரை வரை பாய்மர படகு பயணம் நடைபெறுகிறது. கடலூர் துறை முகத்தில் எஸ்.பி ராஜாராம் கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார்.
தமிழ்நாடு காவல்துறையில், மகளிர் காவல் துறையின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு சென்னையிலிருந்து, கோடியக்கரை வரை மகளிர் காவலர்களின் பாய்மர படகு பயணம் கடந்த 10ஆம் தேதி தொடங்கியது. தமிழ்நாடு காவல்துறையின் வரலாற்றில் புதிய வரலாறு படைக்கும் படகு பயணத்தை இந்த குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.
இது மகளிர் காவலர்களால் மேற்கொள்ளப்படும் மிக நீண்ட படகு பயணமாகும்.
ஆய்வாளர் நீலாதேவி தலைமையில் 25 பேர் கொண்ட குழுவினர் இந்த பாய்மர படகு பயணம் மேற்கொள்கின்றனர். இந்த குழுவினர் இங்கிருந்து காரைக்கால் நோக்கிச் செல்கின்றனர். இந்தக் குழுவினர் சென்னையில் இருந்து கோடியக்கரை வரை சென்று மீண்டும் சென்னை வரை சுமார் 1,000 கி.மீ. பயணம் மேற்கொள்கின்றனர். இந்த குழுவினர் செவ்வாய்க்கிழமை (ஜூன் 13) அதிகாலை கடலூர் துறைமுகத்திற்கு வந்தடைந்தனர்.
கடலூர் மாவட்ட எஸ்பி ராஜாராம் இந்த பாய்மர படகு பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகர், கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, கடலூர் டிஎஸ்பி பிரபு, கடலோர காவல் படை ஆய்வாளர் பத்மா, உதவி ஆய்வாளர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.