விழுப்புரம், மே 29-
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தின் நுழைவு வாயிலில் பேருந்துகளின் வழிப்பாதையை முறைப்படுத்தி, போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் சென்னையை அடுத்து போக்குவரத்தில் முக்கியமான நகரமாக விளங்குவது விழுப்புரம். இங்கிருந்து வெளியூர்களுக்கு செல்ல 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல் திருச்சி, கும்பகோணம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விழுப்புரம் வந்து பிற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளும் அதிகமாக வந்து செல்கின்றன. இதனால் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் எந்நேரமும் பயணிகள் கூட்டம் மிகுந்து காணப்படும்.
இந்த பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் உள்ளே வரவும், வெளியே செல்லவும் தனித்தனி வழிப்பாதை கள் உள்ளன. அந்த வழிப்பாதை முறைகளை பின்பற்றியே அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வந்து செல்ல வேண்டும் என்று போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஓட்டு நர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர். ஆனால் அந்த உத்தரவை ஓட்டுநர்கள் சிலர் முறையாக பின்பற்றுவதில்லை. பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் வெளியே வரும் வழியில் எதிர்திசையில் இருந்து சில பேருந்துகள் அதிவேகமாக பேருந்து நிலையத்திற்குள் வருகின்றன.
புதுச்சேரி மார்க்கம் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் இயக்குவதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் பேருந்து நிலையத்தின் உள்ளே இருந்து வெளியே வரும் பயணிகள் மிகவும் அச்சமடைகின்றனர்.
எனவே பேருந்து நிலையத்தின் நுழைவு வாயிலில் பேருந்துகளின் வழிப்பாதையை முறைப்படுத்தி, விதிகளை மீறும் போக்குவரத்து ஊழியர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.