மதுராந்தகம்,டிச.13- செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள புதுப்பட்டு ஏரி 100 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த ஏரியால் சுற்றி உள்ள சுமார் 700 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் அடைந்து வருகின்றன. தொடர்ந்து பெய்த கன மழையால் புதுப்பட்டு ஏரி முழுவதும் நிரம்பியது. ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நிலையில் செவ்வாயன்று காலை ஏரியின் மதகு அருகே கரை திடீரென உடைந்தது. இதனால் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறி அருகில் உள்ள விவசாய நிலங்களில் பாய்ந்து வருகிறது. இதனால் ஏரி அருகே உள்ள சுமார் 150 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இந்நிலையில் செய்யூர் பொதுப் பணித்துறை அதிகாரிகள் புதுப்பட்டு ஏரியை பார்வையிட்டனர். உடைந்த கரையை அடைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.