districts

சென்னை முக்கிய செய்திகள்

பெருங்குடி குப்பை கிடங்கில் 96 ஏக்கர்  நிலம் மீட்பு

சென்னை, ஜன.7- உயிரி அகழ்ந்தெடுத்தல் திட்டம் மூலம் பெருங்குடி குப்பை கிடங்கில் 96 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது,  தமிழ்நாட்டிலுள்ள 18 மாநகராட்சிகள் மற்றும் 93 நகராட்சிகளில் உயிரி அகழ்ந்தெடுத்தல் திட்டங்களை மாநில அரசு தொடங்கியுள்ளது. இதன் மூலம் பல ஆண்டுகளாக குவிந்துள்ள குப்பை கழிவுகள் அகற்றப்பட்டு அப்பகுதிகள் பூங்காக்க ளாகவும், பசுமை பகுதி களாகவும் மேம்படுத்தப் பட்டு வருகின்றன. அதன்படி, சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் மலை போல் குவிந்த குப்பை கழிவுகளை, உயிரி அகழ்ந்தெடுக்கும் முறையில், தரம் பிரித்து அகற்றும் செயல்முறை மூலம் 96 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுத்தையை கண்காணிக்க  செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

வேலூர், ஜன.7 – வேலூர் மாவட்டம், கே.வி.குப்பத்தை அடுத்த துருவம் பகுதியில் கடந்த டிசம்பர் 18 அன்று சிறுத்தை தாக்கி பெண் ஒருவர் பலியான சம்பவத்தை தொடர்ந்து குடியாத்தம், கே.வி.குப்பம், காட்பாடி உள்ளிட்ட வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் அதிக அளவு சிறுத்தை நடமாட்டம் உள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.  இந்த சிறுத்தை தொடர்ந்து குடியாத்தம் அடுத்த அனுப்பு, வீரிசெட்டிபல்லி, காந்தி கணவாய் கிராமங்களில் கோழி உள்ளிட்ட கால்நடைகளை தாக்கி கொன்றது. இச்சம்பவத்தால் கிராம மக்கள் அச்சமடைந்த நிலையில் வனத்துறை சார்பில் சிறுத்தையை கண்காணிக்கவும் பிடிக்கவும்  வனப்பகுதியில் டிராப்  கேமரா மற்றும் ட்ரோன் கேமரா உள்ளிட்டவற்றை கொண்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி உத்தரவின் பேரில் தனியார் தொழில்நுட்ப வல்லுநர் குழுவுடன் சேர்ந்து வனத்துறையினர் குடியாத்தம் அருகே உள்ள காந்தி கணவாய் பகுதியில் 24 மணிநேரம் இயங்கும் வகையில் ஏஐ தொழில்நுட்பத்துடன் கேமரா மற்றும் ஒலிபெருக்கி வைத்திருந்தனர். ஏஐ தொழில் நுட்பத்தில் வைக்கப்பட்ட அந்த கேமராவில் சிறுத்தை வரும் பதிவு தெரிந்தவுடன் தானாக துப்பாக்கிச்சுடும் ஒலியை எழுப்பி சிறுத்தையை காட்டுக்குள் விரட்டி அடித்த காட்சிகள் தற்போது அங்கு வைக்கப்பட்டிருந்த கேமராவில் பதிவாகி உள்ளது. மேலும் அந்தப் பகுதியில் தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருவதோடு, விரைவில் சிறுத்தை பிடிக்கப்படும் என தெரிவித்தனர்.

வீட்டின் சுவர் இடிந்து   தந்தை மகள் காயம்

கடலூர், ஜன.7 - கடலூர் அருகே  வீட்டின் சுவர் இடிந்து விழுந்து  தந்தை, மகள் காயம் அடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கடலூர் மாவட்டம், முதுநகர் அருகே சங்கொலிகுப்பம் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த  முருகையன் (வயது 60) இவரது மகள்  வீரம்மாள் (35)ஆகிய இருவரும்  பொங்கல் பண்டிகை வருவதை முன்னிட்டு  அவர்களுடைய கூரை வேயப்பட்டிருந்த வீட்டினை சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.  அப்பொழுது  எதிர்பாராத விதமாக  வீட்டின் சுவர்,  இருவர் மீதும் விழுந்து விபத்தில் சிக்கி கொண்டனர். உடனே அருகில் இருந்தவர்கள்  இடிபாடுகளில் சிக்கிய தந்தை, மகளை மீட்டு கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

ராணிப்பேட்டையில் வாகன விழிப்புணர்வு பேரணி

ராணிப்பேட்டை, ஜன.7-  இருசக்கர வாகன ஓட்டி கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும், வாகன ஓட்டிகள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என வலியுறுத்தி போக்குவரத்துத் துறை சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்டஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா செவ்வாயன்று (ஜன. 7) வழங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தா சுக்லா கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். இதில்  வட்டாரப் போக்கு வரத்து அலுவலர் ராம லிங்கம், வாகன ஆய்வாளர்கள் சிவகுமார், செங்குட்டு வேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.