districts

img

கொசஸ்தலை ஆற்றில் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு மீனவமக்கள் போராட்டம்

சென்னை, ஆக. 3-

       கொசஸ்தலை ஆற்றில் உயர் மின்  கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து எண்ணூர் பகுதியில் உள்ள 8 கிராமங்களை சேர்ந்த மீனவ மக்கள், அனல் மின் நிலை யத்தை நோக்கி நடத்திய முற்றுகை போராட்டம் காவல் துறையினரின் சமர சத்தைத் தொடர்ந்து அறவழிப் போராட்ட மாக மாறியது.

    எண்ணூர் மீனவர்களின் வாழ்வாதார மாக விளங்கி வரும் கொசஸ்தலை ஆற்றில்,  வடசென்னை அனல்மின் நிலைய விரிவாக்க பணிகளுக்காக மின் கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரு கின்றன. இதனைக் கண்டித்து எண்ணூர் மீனவர்கள் மின் கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் இடத்திற்கு கடந்த ஜூலை 26ஆம் தேதி படகில் சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருடன் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அது தோல்வியில் முடிந் தது. இதனால், எண்ணூர் பகுதியைச் சேர்ந்த 8 கிராமங்களை சேர்ந்த மீனவ மக்கள் புதனன்று (ஆக.3) அனல் மின் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர்.  

    மீனவர்கள் வாழ்வாதாரமாக விளங்கும் கொசஸ்தலை ஆறு, எண்ணூர் கழிமுக பகுதியில் உயர்மின் கோபுரம் அமைப்பதால் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றுலும் அழிந்து விடும் அபாயம் இருப்பதாகவும், மீன் இனப்பெருக்கம் மற்றும் மீன்களின் வாழ்விடமான ஆறு, கழிமுகப் பகுதிகளில் கட்டுமான கழிவுப் பொருட்களை கொட்டுவதால் மீன்வளம் அழிந்து விடும் அபாயம் இருக்கிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

      அனல் மின் நிலையத்திற்கு செல்லும் வழியிலேயே தடுப்புகள் அமைத்து இரண்டு அடுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பேரணியாக வந்த மீனவ மக்கள் குறிப்பிட்ட ஒரு இடத்தில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.