சென்னை,ஜன.3- தமிழ்நாட்டு பாட்டாளி வர்க்கக் கவிஞர்களுள் முதன்மையான இடத்தை வகித்து வரும் கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு 2023 செப்டம்பரில் தொடங்க இருக்கிறது. புதுச்சேரி அரசு போல தமிழ்நாடு அரசு கவிஞரின் நூற்றாண்டை கொண்டாட வேண்டுமென்றும், தமிழ் ஒளி பெயரில் தமிழ்நாட்டின் ஏதாவதொரு பல்கலைக் கழகத்தில் ஆய்விருக்கை தொடங்க வேண்டுமென்றும் சென்னையில் கவிஞரின் சிலை ஒன்று நிறுவப்பட வேண்டுமென்றும் கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு தமிழ்நாடு அரசிற்கு வேண்டுகோள் விடுத்தது. புகழ்வாய்ந்த சென்னை பல்கலை கழகத்தில் கவிஞர் தமிழ்ஒளி நினைவு அறக் கட்டளை தொடங்கிட ரூ. 5 லட்சத்தை கொண்டு ஜன.4 (புதன்) காலை 10 மணிக்கு சென்னை மெரினாகடற்கரை திருவள்ளுவர் சிலைக்கு எதிரே உள்ள சென்னை பல்கலைக்கழக பவள விழா அரங்கில் அறக்கட்டளை தொடங்கப் படுகிறது. உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அறக்கட்டளையைத் தொடங்கி வைத்து சிறப்புரை யாற்றுகிறார்.இதில் சென்னை பல்கலைக் கழக துணைவேந்தர் ச.கெளரி, பேராசிரி யர் பர்வீன்சுல்தானா, கவிஞர்ஈரோடு தமிழன்பன், சிகரம் செந்தில்நாதன், எழுத்தாளர் இரா.தெ.முத்து உள்ளிட்டோர் பேசுகின்றனர்.