சிதம்பரம், மே. 2- காட்டுமன்னார்கோவில் அருகே கண்டியன்குப்பம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் திங்களன்று (மே 1) நடைபெற்றது. அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பிரகாஷ் பேசுகையில், “கண்டியன்குப்பம் ஊராட்சி ஏரியில் கிராவல் மண்ணை வெட்டி விற்பனை செய்ததில் ரூ. 25 லட்சத்திற்கும் மேல் முறைகேடு நடைபெற்றுள்ளது என்றும் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் கிராவல் மண்ணை வெட்டி விற்பனை செய்த ஒப்பந்தாரர்களிடம் பழுதடைந்த சாலையை சீரமைப்பதற்காக ரூ. 25 லட்சம் ஊராட்சிமன்றத் தலைவர் வாங்கியுள்ளார். ஆனால் அதற்கான கணக்கு காட்டப்படவில்லை. மேலும் சாலை அமைக்காமல் ஊராட்சி மன்றத் தலைவர் அத்தொகையை கையாடல் செய்துள்ளார் என்றும் குற்றம்சாட்டினார். மேலும் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வேண்டும் என்றால் தண்ணீர் வரி, வீட்டு வரி செலுத்தச் சொல்லி கட்டாயப்படுத்துவதாகவும், ஏழ்மை நிலையில் உள்ள சாதாரண மக்களின் புறம்போக்கு இடத்தில் உள்ள குடிசைகளை அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்துவதை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்றத் தலைவி கலித்தாமரிய கொரத்தி காவல்துறையில் புகார் அளித்தார். விவசாய தொழிலாளர் சங்கம் சார்பிலும் முறைகேடுகள் குறித்து புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து இருதரப்பினரையும் அழைத்து உரிய விசாரணை மேற்கொள்வதாக ஒன்றிய நிர்வாகமும், காவல்துறையினரும் உறுதி அளித்தனர்.