ராணிப்பேட்டை, மே 15- ராணிப்பேட்டை நவல்பூரில் மேம்பால பணியை அமைச்சர் காந்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார். ராணிப்பேட்டை அருகே நவல்பூர் ரயில் வழித்தட பாதையில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலம் பழமையானதாகும். போக்குவரத்து நெரிசல் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடமாக இருந்து வந்தது. இதற்கு மாற்றாக உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கடந்த ஆட்சியில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்றும், பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலால் அவதிப்படுவதை தவிர்க்கவும் கனரக வாகனங்கள் சென்னை, பெங்களூர், சித்தூர் வழியாக செல்ல சாலை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்து அதன் அடிப்படையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க ரூ.26.63 கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலைத் துறை மூலமாக பணி கள் நடைபெற்று வருகின்றன. தற்போது 25 விழுக்காடு பணிகள் நிறைவுற்று உள்ளது. 26 மேம்பால தூண்கள் அமைக்கப்பட்டு முடிவுற்று உள்ளது. இதன்மீது சாலை கட்டமைப்பு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றனர். இப்பணிகள் அனைத்தும் 2023 ஆம் ஆண்டுக்குள் முடிக்க கால நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. இந்நிலையில் மேம்பாலத்தின் கீழ் சர்வீஸ் (அணுகு) சாலை அமைக்க நவல்பூர் சி.எஸ்ஐ சர்ச் சுற்று சுவர் பகுதியில் சுமார் 1427 சதுர அடி நிலம் தேவைப்படுகிறது. அதனை கையகப்படுத்தும் இடத்தை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த இடத்தை பொது மக்களின் பயன்பாட்டிற்காக வழங்க நடவடிக்கை எடுக்க தேவாலய குழுவிடம் கேட்டுக் கொண்டனர். இதற்கான இழப்பீடு தொகை வழங்கப்படும் என்றும் எஞ்சியுள்ள பணிகளைக் குறித்த காலத்திற்குள் முடிக்க உதவி செயற்பொறியாளர் திட்டங்கள் நெடுஞ்சாலை துறை மற்றும் ஒப்பந்த தாரருக்கு அமைச்சர் காந்தி உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., நகர்மன்றத் தலைவர் சுஜாதா வினோத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.