திருவண்ணாமலை,நவ. 25- திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரை சுற்றியுள்ள கிராமங்களை நகராட்சியுடன் இணைக்க கூடாது என அப்பகுதி மக்கள் திங்கட்கிழமை ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆரணி நகராட்சி சுற்றியுள்ள முள்ளிப்பட்டு, இரும்பேடு, இராட்டிண மங்கலம், பையூர் ஆகிய கிராமங்களை ஆரணி நகராட்சியோடு இணைப்பதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதனால், 100 நாள் வேலை திட்டம் பறி போகும் நிலை உள்ளதால் நகராட்சி விரி வாக்க திட்டத்தை கைவிட வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் பொது மக்கள் சார்பில் ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. சிஐடியு தலைவர் சி.அப்பாசாமி தலைமை தாங்கினார். மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டத் தலைவர் சி.ரமேஷ்பாபு, சிஐடியு நிர்வாகி பெ. கண்ணன், மாவட்டச் செயலாளர் கே.கே.வெங்கடேசன், மாவட்ட நிர்வாகிகள் எம்.பிரகலநாதன், ஆர்.அண்ணாமலை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். பின்னர் ஆரணி வட்டாட்சியர் கவுரி யிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். இது குறித்து வட்டாட்சியர் இந்த மனுவை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்ததாக தெரிவித்தார்.