districts

ஆன்லைன் லாட்டரி விற்பனை: மொத்த வியாபாரி கைது

விழுப்புரம், ஜூலை 1-

     தமிழ்நாடு முழுவதும் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட மொத்த வியாபாரியை விழுப்புரம் தனிப்படை காவலர்கள் கைது செய்தனர். தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்யும் கும்பலை பிடிக்க சிறப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் உத்தரவின்பேரில், தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த மாதம் 8 ஆம் தேதி லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட விழுப்புரம் மகாராஜபுரம் சேர்ந்த கஜேந்திரன் (54) என்பவரை தனிப்படை காவலர்கள் கைது செய்தனர்.  

   விசாரணையில், லாட்டரி சீட்டு விற்பனை கும்பலுக்கு மொத்த வியாபாரியாக சென்னை மேற்கு தாம்பரம் ஜீவா நகர் பகுதியை சேர்ந்த முருகநாதன் (53) என்பவர் செயல்படுவது தெரிய வந்தது. பின்னர், முருகநாதனை பிடிக்க தனிப்படை காவலர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.  இந்நிலையில் சென்னை தாம்பரத்தில் இருந்து வெளியூருக்கு தப்பிச்செல்ல முயன்ற போது மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனைக்கு மொத்த வியாபாரியாக செயல்பட்டு வந்ததும்,

   பல்வேறு இடங்களிலும் லாட்டரி சீட்டுகளை விற்க தனித்தனியாக முகவர்களை நியமித்துள்ளதும் தெரிய வந்தது.

    ஆன்லைன் லாட்டரி விற்பனை மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார். இதையடுத்து, விலை உயர்ந்த செல்போனையும், ரூ. 1 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்த காவல்துறையினர், வங்கி கணக்கையும் முடங்கியுள்ளனர். மேலும் கைது செய்து விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.