districts

img

நிலம் வீடு கொடுத்தோருக்கு வேலை கொடுக்காமல் வேலையை விற்பனை செய்த என்எல்சி நிர்வாகம்

கடலூர்,அக்.11- என்எல்சி நிறுவனத்திற்கு நிலம், வீடு, மனை கொடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்திற்கு தர வேண்டிய வேலையை பணத்திற்காக ஏஎம்சி ஷார்ட் டேம் என்ற பெயரில் வேலையை விற்பனை செய்த என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து நெய்வேலி ஆர்ச் கேட் எதிரே தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வியாழனன்று (அக்.10) ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம்  தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். என்எல்சி நிறுவனம் 2000 ஆண்டு முதல் 2013 வரை கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு சுரங்க இயக்குனர் மற்றும் விவசாயத்துறை அமைச்சர் ஆகியோர் வாய்க்கால் வெட்டிய பகுதி உட்பட அனைத்து கிராமங்களுக்கும் கருணை தொகை கொடுத்து விடுங்கள் என்று கூறியும், ஒரு சில கிராமங்களுக்கு கொடுக்காமல் இருப்பதை வழங்க வலியுறுத்தியும், நிலம் கொடுத்து 35 ஆண்டுகளாகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2013 நில எடுப்புச் சட்டத்தின் கீழ் நிரந்தர வேலை கொடுக்க வேண்டும் என்று சொல்லியும், நிரந்தர வேலை கொடுக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிரந்தர வேலை வழங்க வேண்டும். நிலம் கொடுத்த வர்களுக்கு ஒரே சீனியாரிட்டி கடைபிடித்து வேலை வழங்க வேண்டும், கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் இருந்த ஆழ்துளை கிணற்றிற்கும்  இழப்பீடு வழங்க வேண்டும், மின் இணைப்பை கேட்கும் இடத்திற்கு மாற்றித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஜி.ஆர். ரவிச்சந்திரன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  முன்னாள் மாநில துணைச் செயலாளர் ஜி.மாதவன்,  மாவட்ட துணைத்தலைவர் எஸ்.தட்சிணாமூர்த்தி , பி.கற்பனை செல்வம், விவசாயிகள் தொழி லாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.பிரகாஷ், பொருளாளர் டி.கிருஷ்ணன், துணை செயலாளருக்கு பி.வாஞ்சிநாதன், மிகிழ் வளையமாதேவி ஊராட்சி மன்றத் தலைவர் த. சண்முகம் உள்ளிட்ட ஏராளமானோர் கடந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் விவசாய சங்க மாவட்ட பொருளாளர் ஆர். ராமச்சந்திரன் நன்றி கூறினார். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் இந்திய அரசுக்குச் சொந்தமான ஒரு பழுப்பு நிலக்கரிச் சுரங்க நிறுவனம். இந்தியப் பொது நிறுவனங்களில் நவரத்னா வகையினைச் சேர்ந்தது. நெய்வேலியில் அமைந்துள்ள இந்நிறுவனம் வருடத்துக்கு 30.6 மில்லியன் டன் பழுப்பு-எரிபொருள் உற்பத்தி செய்கிறது. கோடிக்கணக்கான ருபாய் லாபமீட்டினாலும் நிலம் கொடுத்தோருக்கு உரிய இழப்பீடும் வேலையும் வழங்க மறுத்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பல ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். -வ.சிவபாலன்

காத்திருப்பு போராட்டத்தால்  எம்பியை சந்தித்த என்எல்சி தலைவர் 

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் என்எல்சி தலைவர் சந்திக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் புறப்பட்ட நிலையில் என்.எல்.சி தலைவர் சந்திக்க மறுத்து விட்டதாக  கீழ்மட்ட அதிகாரிகளால் தகவல் பரப்பப்பட்டது. இதனால் போராட்ட களத்திலேயே விவசாயிகள் அனைவரும் கொட்டும் மழையில் காத்திருந்தனர். என்எல்சி தலைவரை சந்திக்கும் வரை இந்த போராட்டம் தொடரும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் அறிவித்து போராட்ட பந்தலில் மக்களுடன் மக்களாக காத்திருந்தார். இந்த நிலையில் என்.எல்.சி தலைவர்  நாடாளுமன்ற உறுப்பினரை தொடர்பு கொண்டு  சந்திக்க அழைத்தார்.  மக்களவை உறுப்பினர் மற்றும் விவசாய சங்க, விவசாய தொழிலாளர் சங்கத்தினரை என்எல்சி தலைவர் பிரசன்ன குமார் மேட்டுப்பள்ளி சந்திப்பதற்கு காவல்துறையினர் அழைத்து சென்றனர்.  என்எல்சி நிறுவனத்திற்கு நிலம் மற்றும் வீடு கொடுத்துள்ள விவசாயிகள், தொழிலாளர் கோரிக்கை குறித்த மனுக்களை கொடுத்து பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து  நிறைவேற்றுவதாக மக்களவை உறுப்பினரிடம் என்எல்சி தலைவர் உறுதி அளித்தார்.