ராயபுரம்,மே 25-
புதுவண்ணாரப்பேட்டை, கிராஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் அசோகன். இவர் ராணுவ மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.
இவரது மனைவி நாகேஸ்வரி (வயது 57). இவர்களது மகன்கள் நவீன்(வயது34), விவேக்(32). மகன்களுக்கு 30 வயதுக்குமேல் ஆகியும் திருமணம் ஆகவில்லை என்று நாகேஸ்வரி மன வருத்தத்தில் இருந்தார். இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
மகன்களுக்கு திருமணம் நடைபெறவில்லை என்று மனவேதனையில் இருந்த நாகேஸ்வரி திடீரென சமையல் அறையில் இருந்த மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல்கருகிய நாகேஸ்வரி சம்பவ இடத்திலே இறந்தார்.
இதைத்தொடர்ந்து புதனன்று நாகேஸ்வரியின் இறுதி சடங்குநடைபெற்று உடல் தகனம் செய்யப்பட்டது. அப்போது அவரது 2-வது மகன் விவேக் மிகவும் மனம் உடைந்து காணப்பட்டார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி சென்றனர். எனினும் தாயின் இழப்பை விவேக்கால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. வியாழனன்று வீட்டில் இருந்த அவர் மண்ணெண்ணெய் கேனுடன் காசிமேடு பகுதியில் உள்ள நாகூர் தோட்டம் பகுதிக்கு சென்றார். அங்குள்ள காலி இடத்தில் அவர் திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் உடல் கருகிய விவேக் சம்பவ இடத்திலேயே இறந்தார்.