districts

மோடி அரசின் மே தின ‘பரிசாக’ வணிக சிலிண்டர் விலை மேலும் அதிகரிப்பு

சென்னை,மே 1-  விலை உயர்வுகளால் மக்கள் கஷ்டப்படுவதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் மோடி அரசு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது வணிக  பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை  ரூ.100 அதிகரிக்கப்பட்டுள்ளது.  வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வர்த்தக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச விலை நிலவரம்,  ரஷ்யா -உக்ரைன் போர் ஆகியவற்றை காரணம் காட்டி  எல்பிஜி சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. அதன்படி வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.100 அதிகரித்துள்ளது.  இந்த விலை உயர்வு மூலம், தில்லியில் 19 கிலோ வணிக சிலிண்டர் விலை ரூ.2355.50 ஆக உள்ளது.  கொல்கத்தாவில் ரூ.2351க்கு பதிலாக ரூ.2455, மும்பையில் ரூ.2205க்கு பதிலாக ரூ.2307க்கு விற்கப்படுகிறது. சென்னையில் வர்த்தக சிலிண்டர் விலை ரூ.2406ல் இருந்து ரூ.2508 ஆக உயர்ந்துள்ளது. ஒன்றிய மோடி அரசின் மே தின ‘பரிசாக’ இந்த விலை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது என்று அரசியல் கட்சியினரும் மக்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.