தலச்சேரி, செப்.29- கேரளத்தில் துப்பாக்கித் தோட்டாவை தோற்கடித்து துணிச்சலுடன் முப்பதாண்டு களாக உயிருக்குப் போராடிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் புஸ்பன் (54) கோழிக்கோடு பேபி மெமோரியல் மருத்துவமனையில் சனிக்கிழமை மாலை 3.30 மணியளவில் உயிரிழந்தார். அவரது உடல் கோழிக்கோட்டில் இருந்து கண்ணூர் வரை வாகனத்தில் அணிவகுப்பாக செப்.29 ஞாயிறன்று கொண்டு வரப்பட்டது. கூத்துப்பறம்புக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட புஸ்பனின் உடலை சிபிஎம் கேரள மாநில செயலாளர் எம்.வி.கோவிந்தன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க அகில இந்திய தலைவர் ஏ.ஏ.ரஹீம் எம்.பி., உள்ளிட்டோர் வீட்டுக்கு சுமந்து வந்தனர். மாலை 5 மணியளவில் பல்லாயிரக்கணக்கான மக்களின் முழக்கத்துடன் கூத்துப்பறம்பு தியாகிகள் நினைவிடம் அருகில் அவரது உடல் எரியூட்டப் பட்டது. சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் இ.பி.ஜெயராஜன், கேரள சபாநாயகர் ஏ.எம்.சம்ஷீர், மாநிலங்களவை உறுப்பினர் வி.சிவதாசன், வாலிபர் சங்க மாநில தலைவர் வி.வசீப், செயலாளர் வி.கே.சனோஜ் தமிழ்நாடு மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக், செயலாளர் வி.சிங்காரவேலன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். 1994ம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி யுடிஎப் அரசின் ஊழல் மற்றும் கல்வி வியாபாரத்திற்கு எதிராக கூத்துப்பறம்பில் அமைச்சர் எம்.வி.ராகவனுக்கு கருப்புக்கொடி காட்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போராட்டம் நடத்தியது. அதற்கு எதிராக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் கே.கே.ராஜீவன், கே.வி.ரோஷன், ஷிபுலால், பாபு, மது ஆகியோர் வீரமரணம் அடைந்தனர். இதில் இருபத்தி நான்கு வயதான புஸ்பனின் முதுகுத் தண்டு துப்பாக்கி குண்டால் துளைக்கப்பட்டது. வலதுசாரி ஊடகங்கள் கூத்துப்பறம்பு போராட்டத்தையும் தியாகத்தையும் அவமதித்த போதெல்லாம் புஸ்பன் அந்த தியாகத்தின் வாழும் சாட்சியமாக வலுவான பாதுகாப்புக் குரலாக மாறினார். ஒரு கம்யூனிஸ்ட் சிந்தனை யுடன் இறுதிவரை போராடினார். யுடிஎப் அரசு கல்வியை தனியார் மயமாக்க மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டது. லட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். ஊழலுக்கு எதிரான அந்த முழக்கம் அன்றைய யுடிஎப் அரசின் தோல்விக்கும் வழிவகுத்தது.