districts

img

மாமல்லபுரம் சிற்பங்களை காண அனுமதிச்சீட்டு வழங்கல்

செங்கல்பட்டு,டிச.28-  கொரோனா தொற்று பரவிய நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையும், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ந் தேதி முதல் ஜூன் மாதம் 27-ந் தேதி வரையும்  புராதன சிற்ப பகுதிகள் மூடப்பட்டதால் மாமல்லபுரத்தில் சுற்றுலா முடங்கியது. தமிழக அரசின் தளர்வுகள் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 28-ந் தேதி சுற்றுலாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டு மாமல்லபுரம் புராதன சிற்ப பகுதிகள் திறக்கப்பட்டன.  தொல்லியல் துறை நிர்வாகம் கொரோனா தொற்று சூழல் கருதி நுழைவு  சீட்டை கவுண்டர்களில் வழங்காமல் இணைய வழியாக மட்டுமே வழங்கியது.  சாதாரண மொபைல் போன் பயன்படுத்து வோர், இத்தகைய சீட்டை பெற இயலாமல் அவதியுற்று வந்தனர். ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரும் சிக்னல் நெட்வொர்க் கிடைக்காத சிக்கலால் கியூ.ஆர்., குறியீட்டை ஸ்கேன் செய்யவும், இணைய கட்டணம் செலுத்தவும் நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்ய இயலாமல் பரிதவித்து வந்தனர். இதை சாதகமாக்கிக் புரோக்கர்கள் அவரவர் மொபைல் போனில் நுழைவு சீட்டு பதிவிறக்கி ரூ.40 நுழைவு கட்டணத்திற்கு ரூ.50 முதல் ரூ.100 வரை பயணிகளிடம் ஏமாற்றி கட்டணம் வசூலித்தனர். இந்த சிக்கலை தவிர்க்க, கட்டண கவுண்டரில் நுழைவு சீட்டு வழங்க வேண்டிய அவசியம்  குறித்து சுற்றுலா பயணிகள், சமூக ஆர்வ லர்கள் தொல்லியல் துறைக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்து பரிசீலித்த தொல்லியல் துறை மீண்டும் கட்டண கவுன்ட்டரில் நுழைவு சீட்டு வழங்கும் பணியை 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கி நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.