districts

img

புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

சென்னை, நவ. 23- சென்னை புறநகரில் பலத்த மழை பெய்து வருவதால், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 13 ஆயிரத்து 222 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். வியாழனன்று காலை நிலவரப்படி குடிநீர் ஏரிகளில் மொத்தம் 9,958 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை கொட்டி வரு கிறது. புழல் ஏரிக்கு வியாழன் காலை நிலவரப்படி 525 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கனஅடி. இதில் 2755 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. 189 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மி.கனஅடி. இதில் 692 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 197 கனஅடி தண்ணீர் வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மி.கனஅடி. இதில் 3138 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு வியாழனன்று காலை நீர்வரத்து 451 கனஅடியாக அதிகரித்தது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரமான 24 அடியில் 22 அடியை நீர்மட்டம் மீண்டும் எட்டி உள்ளது. தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மழை நீடித்தால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறக்க வாய்ப்பு உள்ளது. தற்போது ஏரியில் இருந்து 162 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கனஅடி. இதில் 1874 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 210 கனஅடி தண்ணீர் வருகிறது. 68 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடியில் 436 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 20 கன அடி தண்ணீர் வருகிறது. 10 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.