கிருஷ்ணகிரி,டிச.21 ஓசூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு ரூ.100 கோடியில் ஒதுக்கப்பட்டுள்ளதால் புதிய கட்டிடங்கள் விரைவில் கட்டப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரி வித்தார். தேன்கனிக்கோட்டை வட்டம், கெலமங்கலம் ஒன்றியம் ராயக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 1.25 கோடி மதிப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டுமான பணிகளை அமைச்சர்கள் அர.சக்கரபாணி, மா.சுப்பிர மணியன் தொடங்கி வைத்தனர். கெலமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம்,சீதாராம் நகர் புற பொது சுகாதார ஆய்வகம்,கெலமங்கலம் புற நோயாளிகள் பிரிவு,பாரூர் வட்டார பொது சுகாதார பிரிவு உட்பட 7 மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்தனர். கிருஷ்ணகிரியில் மருத்துவ கல்லூரி தொடங்கப்பட்ட நிலையில் அங்கு இயங்கி வந்த அரசு தலைமை மருத்துவமனை 3 ஆண்டுகளுக்கு முன்பு ஓசூருக்கு மாற்றப்பட்டது. ஓசூர் நகரின் வளர்ச்சி மற்றும் தேவையை கருதி விரைவில் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ரூ.100 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள் ஓசூரில் கட்டப்பட உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தொடர்ந்து பயனாளிகளுக்கு கண் கண்ணாடி, ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் சரயு, கூடுதல் ஆட்சியர் வந்தனா கார்க், ஓசூர் மாநகராட்சி ஆணையர் சினேகா, ஓசூர் சாராட்சியர் பிரியங்கா, இணை இயக்குனர் பரமசிவன்,துணை இயக்குநர் ரமேஷ் குமார், கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் பங்கேற்றனர்.