சென்னை, பிப். 26 - மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பாக தலைவர்கள் படங்கள், பெயர்களுடன் பொருத்தப்பட்ட 43 ஆயிரம் வாகனங்களின் பதிவெண்களை போக்குவரத்து காவல்துறையினர் சரி செய்துள்ளனர். சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பாக வாகனங்களின் பதிவெண் பலகைகளில் தலைவர்களின் படங்கள், கட்சி வண்ணங்களில் எண்கள், பெயர்கள், படங்கள், வாசகங்கள் எழுதி வைத்துள்ளனர். சட்டத்திற்கு புறம்பாக இதுபோன்று அமைக்க காவல்துறையினர் அவ்வப்போது எச்சரித்து வருகின்றனர். இருப்பினும் அதையும் மீறி இத்தகைய விதி மீறலில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, இத்தகைய விதிமீறலை சரி செய்ய அவ்வப்போது காவல்துறையினர் சிறப்பு நடவடிக்கைகளை எடுக்கின்றனர். இதன்படி, போக்குவரத்து விதிகளை மீறி பதிவெண் பலகை கொண்ட வாக னங்களை சனிக்கிழமையன்று (பிப்.25) காவல்துறையினர் தணிக்கை செய்தனர். சென்னை மாநகரம் முழுவதும் உள்ள பூங்காக்கள், வணிக வளாகங்கள், மார்க்கெட்டுகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள், பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள் சோதனை செய்யப்பட்டது. இதில், 4 ஆயிரத்து 132 வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டது. அதோடு இல்லாமல் வழக்கு பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் பதிவெண்கள் உடனே சரிசெய்யப்பட்டது. அபராதம் செலுத்த முடியாத வாகன ஓட்டிகளுக்கு 3 நாட்களுக்குள் அபராதம் செலுத்த அறி வுறுத்தப்பட்டது. இதன்படி, அபராதம் செலுத்த தவறும் பட்சத்தில் 1500 ரூபாய் கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். மாநகரம் முழுவதும் கடந்த 3 வாரங்க ளில் 43 ஆயிரம் வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு முறையற்ற நிலையில் இருந்த பதிவெண்கள் சரிசெய்யப்பட்டுள்ளது.