districts

பள்ளி-கல்லூரி படிப்பை புறக்கணிக்கும் குறவன் இன மாணவர்கள்: முதல்வர் தலையிட கோரிக்கை

சென்னை,மார்ச் 8- தமிழ்நாட்டின் பூர்வ குடிகளான குன்றக்குறவர்கள், சங்க இலக்கியங் காலம் தொட்டு வாழ்ந்து வருகின்றனர். இந்த குறவன் இனமக்கள் பல்வேறு சாதிப் பட்டியலில் வாழ்ந்து வரு கிறார்கள். உதாரணத்திற்கு, மலைக்குறவன்(எஸ்டி), குறவன்(எஸ்சி), கொறவர் (எம்பிசி) பட்டியலிலும் உள்ளனர். குறவன் மக்கள் வாழ்கின்ற இடத்தை வைத்தும், செய்கின்ற தெழில்களை வைத்தும் பல்வேறு சாதிப் பிரிவாக பிரித்து வைத்துள்ளனர்.  வேலூர் மாவட்டம், பொன்னை கிராமத்தில் வாழ்ந்து வந்தவர்களை பொன்னை குறவர்கள் என்றும் திருவண்ணாமலை மாவட்டம், செங்காயம் பூண்டி கிராமத்தில் செங்காயம் பூண்டி குறவர்கள் என்றும் மூங்கில் கூடை பின்னுபவர்கள் தப்பக்குற வர்கள் என்றும் ஈச்சங் கூடை பின்னுபவர்கள் ஈஞ்சக்குறவர்கள் என்றெல்லாம் அழைக்கின்றனர். தமிழ்நாட்டில் 26 வகையாக குறவர்களை பிரித்து வைத்துள்ளனர். ஆனாலும், எந்தப் பிரிவிலும் எளிதாக சாதிச் சான்று வழங்குவதில்லை. இதனால்  இவர்களுக்கு கல்வி,வேலைவாய்ப்பு எட்டாக்கனி யாகவே இருந்து வருகிறது. இந்தநிலையில்தான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கமும் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வந்தது. அதன் தொடர் நடவடிக்கையாக பல்வேறு சாதிப் பட்டியலில் பிரிந்துகிடக்கும் குறவன் இனத்தை நீக்கம் செய்து பழங்குடி பட்டியலில் குறவன் இனத்தை சேர்க்க வேண்டும் என்று அன்றைய முதல்வர் கலை ஞருக்கு அப்போது சிபிஎம் மாநிலச் செயலாளராக இருந்து என்.வரதராஜன் கடிதம் எழுதினார். அவரது நியாயமான கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கலைஞர், பழங்குடி ஆராய்ச்சி மையத்தின் ஆய்வறிக்கையை கேட்டுப்பெற்று குறவன் இனத்தின் உட்பிரிவுகள் அனைத்தையும் பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று 2008 ஆம் ஆண்டில் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையின் மீது சில விளக்கங்கள் கேட்டு தமிழ்நாடு அரசுக்கு, ஒன்றிய அரசின் பதிவாளர் திருப்பி அனுப்பினார். ஆட்சி மாற்றத்திற்கு பிறகு பழங்குடி ஆராய்ச்சி துறையின் மூலமாக அன்றைய முதல்வர் ஜெயலலிதாவும் குறவன் இனத்தை பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தார்.  

லட்சக்கணக்கான குறவன் இன மக்களுக்காக தமிழ்நாட்டில் இரண்டு முதலமைச்சர்களும் பரிந்துரை செய்து அனுப்பியதை இந்திய பதிவாளர் மீண்டும் சில விளக்கங்களை கேட்டு திருப்பி அனுப்பினார். தற்போது அது ஊட்டியிலுள்ள பழங்குடி ஆராய்ச்சி மையத்தால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் பரிந்துரைகளையும் விளக்கங்களையும் விரைந்து ஒன்றிய அரசுக்கு அனுப்பாமல் உள்ளதால் ஆதிதிராடவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணைகள் திருத்தச் சட்டம் சட்டம் 1976-ன் படி, வரிசை எண் 36 இல் உள்ள ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் குறவன் இன மக்கள் என்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் எஸ்சி வகுப்புச் சான்று வழங்க நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் வருவாய்த்துறை அதிகாரிகள் மறுத்து வருகிறார்கள். இதனை கண்டித்து பள்ளி-கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தி வரு கின்றனர். பிற மாவட்டங்களில் குற வன் இன மக்களுக்கு எஸ்டி மற்றும் எஸ்சி சாதிச் சான்று வழங்கப் பட்டு வரும் நிலையில், திருப் பத்தூர் மாவட்டத்தில் மட்டும் அநீதி இழைக்கப்படுகிறது. பி.டில்லிபாபு சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது இதுகுறித்து சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் குரல் எழுப்பினார். மாவட்ட ஆட்சியர், துறையின் செயலாளர், உயர் அதி காரிகள் உள்ளிட்ட பலரிடமும் முறையிட்டார். அதன்தொடர்ச்சியாக, ரத்த சொந்தங்கள், உடன் பிறந்தவர்கள், பெற்றோரின் சாதிச் சான்றுகளை கொடுத்தபோதும், திருப்பத்தூர் மாவட்டத்தில் வாழும் மக்கள் குறவன் இனம் இல்லை என்று வருவாய்த்துறை அதிகாரிகள் சட்டத்துக்கு புறம்பாக நடந்து கொள்கிறார்கள். சாதிச் சான்று கோரி குறவன் இன மக்கள் விண்ணப்பித்தும் அதை வழங்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருவதால் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி பள்ளியில் சேர்ந்து படிக்கமுடியவில்லை. பத்து, பன்னிரண்டாம் வகுப்பு, பல்வகை தொழில் நுட்பம், உயர் கல்வி படிப்புகளும் அரசு வழங்கும் உதவித் தொகையும் கிடைப்பதில்லை.

இதனால் இந்த இனத்தை சேர்ந்த பல மாணவர்கள் விரக்தியில் தற்கொலை முடிக்கு செல்கிறார்கள். பள்ளி படிப்பை முடித்தாலும் உயர்க் கல்வியை தொடர சாதிச் சான்று கிடைப்பதில்லை. மாதக்கணக்கில் அலைந்தாலும் ஓரிருவருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. அப்படியே அத்தி பூத்தாப்போல் அரசுப் பணி கிடைத்தாலும் சாதிச் சான்று கிடைப்பதில்லை. இதனால், கிடைத்த வேலையும் பறிபோகிறது.  எனவே, குறிஞ்சி நிலத்தில் தோன்றிய பூர்வக்குடிகளான குறவன் இன மக்கள் அனைவரையும் ஒரே பட்டியலில் கொண்டு வந்து பழங்குடி சான்று வழங்கி இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணவும், பள்ளி-கல்லூரிகளுக்கு செல்லாமல் புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வரும் மாணவர்களின் எதிர்க்கால நலனை கருத்தில் கொண்டு விண்ணப்பம் செய்திருக்கும் குறவன் இன மாணவர்கள் அனைவருக்கும் சாதிச் சான்று விரைந்து வழங்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னற்ற சங்கத்தின் மாநிலச் பொதுச் செயலாளர் ஏ.வி. சண்முகம் கோரிக்கை விடுத்திருக்கிறார்.