districts

சென்னை முக்கிய செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் அனைவருக்கும் தரைத்தள உரிமை உண்டு  

சிஎம்டிஏ-வுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, மார்ச் 15- அடுக்குமாடி கட்டுமான விதிகளின் படி  தரைத்தள உரிமை அனைத்து குடியிருப்பு வாசிகளுக்கும் உள்ளது என்பதை பெருநகர வளர்ச்சி குழுமம் உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெசன்ட் நகரை சேர்ந்த அஸ்வின் வர்மா  சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்  செய்த மனுவில், பெசன்ட் நகரில் ரமணியம்  ஸ்வர்ணமுகி என்ற அடுக்குமாடி குடி யிருப்பை கட்டுமான நிறுவனம் போதுமான தரைதள வசதி இல்லாமல் விதிகளை மீறி கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளனர். இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு, மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கட்டுமான நிறுவனம் சார்பில் எந்த விதிமீறல்களும் நடைபெறவில்லை, பெருநகர வளர்ச்சி குழும விதிகளின் படி  கட்டுமானங்கள் முடிந்து உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது என தெரிவிக்கப் பட்டது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த  வழக்கறிஞர் முரளி குமரன், தரைத்தள கட்டு மான விதிப்படி, கட்டிட உரிமையாளர் களுக்கு போதுமான இடங்கள் ஒதுக்கப்பட வில்லை என தெரிவித்தார். பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தர வில், விதிகளின் படி தரைத்தள உரிமை  அனைத்து குடியிருப்பு வாசிகளுக்கும் வழங்கப்பட வேண்டும். சட்டவிரோத கட்டு மானங்கள் இருந்தால் அவற்றை அகற்றி அனைத்து கட்டிட உரிமையாளர்களின் பொதுபயன்பாட்டுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெருநகர் வளர்ச்சி குழுமத்திற்கு உத்தரவிட்டனர்.

கழிவுநீர் குட்டையில்  தவறி விழுந்து வாலிபர் பலி

கழிவுநீர் குட்டையில்  தவறி விழுந்து வாலிபர் பலி சென்னை, மார்ச் 15- தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கிரண்ராஜ் (19). ஐடிஐ முடித்த இவர் வெல்டிங் வேலை செய்து வந்தார். இந்நிலையில் போட்டோ ஷீட் எடுத்து இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை பதிவிடுவதற்காக தனது நண்பர்கள் 8 பேருடன் எர்ணாவூர் குப்பம் அருகே உள்ள பகுதிக்கு சென்றுள்ளனர். அப்பகுதியில் ஒரு கழிவு நீர் குட்டை உள்ளது பராமரிப்பில்லாத அந்த குட்டையில் மழைநீர் தேங்கி சேரும் சகதியும் இருந்தது. இளைஞர்கள் ஆரவாரமாக செல்பி எடுக்க அந்த வழியாக சென்றபோது அங்கிருந்த ஒருவர் அங்கே செல்லாதீர்கள், அது ஆபத்தான இடம் என எச்சரித்துள்ளார். இதையடுத்து 8 பேரும் அவசர அவசரமாக திரும்பினர்.v எண்ணூர் விரைவு சாலைக்கு வந்த பிறகு, உடன் வந்த  கிரண்ராஜ் காணாமல் போனது தெரிய வந்தது. பின்னர் குட்டை பகுதிக்கு சென்று பார்த்த போது அங்கு கிரண்ராஜ்  பரிதாபமாக நீரில் மூழ்கி இறந்து கிடந்தது தெரியவந்தது.

நடந்தாலும், ஓடினாலும், உருண்டாலும் மோடிக்கு தமிழகத்தில் வாய்ப்பில்லை

சென்னை,மார்ச் 15- பிரதமர் மோடி நீருக்கடியில் நீந்தினாலும், தரையில் நடந்தாலும், வான் மார்க்கமாக வந்தா லும், நடந்தாலும், ஓடினாலும், உருண்டாலும் தமிழகத்தில் பாஜக-வெற்றி பெறாது என்றார் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு. திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தேர் தல் காலத்தில் வழங்கப்பட்ட நிதியில் வெளிப்ப டைத் தன்மை உள்ளது. யாரையும் அச்சுறுத்தி யோ, மிரட்டியோ பெறப்படவில்லை. ஆனால், பாஜக பெற்ற நிதியின் கால அளவைப் பார்க்க  வேண்டும். அந்த நேரங்களில் பாஜக-வின் தோ ழமை அமைப்புக்கள் இடி, ஐடி, சிபிஐ சோதனை நடத்தியிருப்பார்கள். எனவே பாஜக பெற்ற நிதிக்கும் திமுக பெற்ற நிதிக்கும் வித்தியாசம் உள்ளது என்றார்

இரட்டை இலை வழக்கில் இன்று உத்தரவு

புதுதில்லி, மார்ச் 15- இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தொடர்ந்த வழக்கில் தில்லி உயர்நீதிமன்றம் இன்று (மார்ச் 16) உத்தரவு பிறப்பிக்கிறது. இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தொடர்ந்த வழக்கில் இன்று (சனிக்கிழமை) உத்தரவு பிறப்பிக்கப் படும் என்று தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி சச்சின் தத்தா தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்கள் குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வில்லை என புகழேந்தி வழக்குத் தொடர்ந்திருந்தார்.