districts

சென்னை முக்கிய செய்திகள்

மரச்சாமான்கள் உற்பத்தி தொழில்நுட்ப மாநாடு

சென்னை, பிப்.1-  மரவேலை மற்றும் மரச்சாமான்கள் உற்பத்தி தொழில்நுட்பம் தொடர்பான ‘இந்தியாவுட் 2024 மாநாடு’ பெங்களூரில் உள்ள பெங்களூர் சர்வதேச கண்காட்சி மையத்தில் பிப். 22 ஆம்தேதி முதல் 26 ஆம் தேதி வரை  நடைபெற உள்ளது. 75 ஆயிரம் சதுர மீட்டர் உள்ள இந்த கண்காட்சி மையத்தில் 50 நாடுகளைச் சேர்ந்த 950 நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இந்த மாநாட்டில் சமீபத்திய கண்டு பிடிப்புகள், தொழில்நுட்பம் மற்றும் இணையற்ற நெட்வொர்க்கிங் வாய்ப்புகள் குறித்து காட்சிப்படுத்தப்பட உள்ளன.   தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் சிந்தனைத் தலை வர்கள் பங்கேற்கும் கருத்தரங்குகள், பயிற்சி பட்டறைகள்  மற்றும் குழு விவாதங்கள் ஆகியவையும் நடைபெற வுள்ளன.

விவோ இக்னைட் விருதுகள் 19 ஆயிரம் பேர் விண்ணப்பம்

சென்னை,பிப்.1- விவோ ஸ்மார்ட்போன் நிறுவனம் அறிவித்த , ‘விவோ  இக்னைட்: தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு விருதுகள் 2023’க்கு   நாடு முழுவதும் இருந்து 8 முதல் 12வது வரை படிக்கும் 19 ஆயிரம் மாணவர்கள் தங்களின் 4 ஆயிரம் புதுமை திட்டங்களை சமர்ப்பித்துள்ளனர்.  இந்த போட்டிக்கு மாணவர்கள், ‘நன்மைக்கான தொழில்நுட்பம்’ என்னும் கருப்பொருளின் அடிப்படையில்  தனிப்பட்ட முறையில் மற்றும் குழுவாக தங்களின் கண்டுபிடிப்புகளை சமர்ப்பித்துள்ளனர். இந்த போட்டி யானது 2 கட்டங்களாகவும் அதனைத் தொடர்ந்து இறுதிப்  போட்டியும் நடைபெறும். 2-ம் கட்ட போட்டிக்கு, மண்டல  அளவில் 200 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்கள் தங்களின் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் அவை செயல்படும் விதம் குறித்த மாதிரி வீடியோவை திட்ட டிஸ்ப்ளே போர்டுடன் சமர்ப்பிக்க வேண்டும். இதில் முதல் பரிசு பெறுபவருக்கு 7 லட்ச ரூபாயும், 4 பேருக்கு இரண்டாம் பரிசாக மொத்தம் 14 லட்ச ரூபாயும் வழங்கப்படும் என்று விவோ இந்தியா நிர்வாகியான கீதாஜ்  சன்னானா  கூறினார்.

சென்னை - அயோத்தி விமான  கட்டணம் திடீர் அதிகரிப்பு

சென்னை,பிப்.1- உத்தரபிரதேசம்  அயோத்தியில் கடந்த மாதம் 22ந்தேதி  ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, பால ராமர்  சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு  23-ந்தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப் பட்டனர். அயோத்தி ராமர் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து  விமான விமான சேவை தொடங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். சென்னையில் இருந்தும் வியாழன் முதல் அயோத்திக்கு  தினசரி விமான சேவை தொடங்கப்பட்டது. இந்த விமானத்தில்  பயணிப்பதற்கான கட்டணம் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம்  வரை வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த  விமானத்துக்கான டிக்கெட் முன்பதிவை ஸ்பைஸ் ஜெட்  நிறுவனம் ஏற்கெனவே தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய போது நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்கப்பட்டாலும், நேரம் செல்லச்செல்லமுன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் சில மணி நேரங்களில் விமான  கட்டணம் பல மடங்கு எகிறியது. இதனால் அயோத்திக்கு விமானத்தில் செல்லலாம் என்று முடிவு செய்திருந்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

8வது மண்டலத்தின் தூய்மைப்பணியை  தனியார்மயமாக்க சிபிஎம் எதிர்ப்பு

சென்னை, பிப். 1 - 8வது மண்டலத்தில் குப்பை அள்ளும்  பணியை தனியாருக்கு கொடுக்க மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி கூட்டம் புதனன்று (ஜன.31) மேயர் ஆர்.பிரியா தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய 107வது வார்டு உறுப்பினர் கிரண் சர்மிலி (விசிக), 8வது மண்டலத்தில் தூய்மை பணியாளர்கள் குறைவாக உள்ளதால், தூய்மை பணியை தனியாருக்கு கொடுக்க வேண்டும் என்றார். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மேயர் பதிலளித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 98வது வார்டு உறுப்பினர் ஆ. பிரியதர்ஷினி (சிபிஎம்) பேசுகையில், ஆட்கள் குறைவாக இருந்தால் காலிப்பணியிடங்களை அல்லது தேவையான பணியிடங்களை உருவாக்கி நிரப்ப வேண்டும். மாறாக, தனியார் மயமாக் குவது தீர்வாகாது. குப்பை அள்ளும் பணியை  தனியார்மயமாக்க கூடாது என்றார். இதனை தொடர்ந்து பேசிய 13வது மண்ட லக்குழு தலைவர் துரைராஜ் (திமுக), அரசாங்கத்திடம்தான் சிறப்பான உட்கட்ட மைப்பு வசதி உள்ளது. ஆதலால் உறுப்பினர்  பிரியதர்ஷினி குறிப்பிட்டவாறு தனியார் மயம் ஆக்குவது தீர்வாகாது. அனைத்து பணிகளையும் முடிந்தவரை மாநகராட்சியே செயல்படுத்த வேண்டும் என்றார்.

முதலமைச்சர் நிதியுதவி 

சென்னை, பிப்.1- கன்னியாகுமரி மாவட் டம், தேங்காய்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தி லிருந்து ஜன.14 அன்று விசைப்படகில் மீன்பிடிக்க சென்றவர்களில் விசைப்பட கில் சமையல் பணிக்குச் சென்ற ஜலாலுதீன் (38), சுமார் 40 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் விசைப்படகிலிருந்து கடலில் தவறி விழுந்தார். அவரை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், இது வரை கண்டுபிடிக்க இயலவில்லை. என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனைய டைந்தேன். எனவே, அவரது குடும்பத்திற்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

சத்தீஷ்கரில் பலியான துணை ராணுவ வீரர் 

வேலூர்,பிப்.1- வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி ஊராட்சி கே.மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் செங்கப்பன். அவரது மகன் தேவன் (30) சத்தீஷ்கார் மாநிலத்தில் துணை ராணுவத்தில் (சி.ஆர்.பி.எப்.) பணிபுரிந்து வந்தார். ஒரு மாதத்திற்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்து விட்டு மீண்டும் பணிக்கு சென்றுள்ளார்.  இந்த நிலையில் சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூர் அருகே உள்ள ஒரு காட்டுப்பகுதியில் சக வீரர்களுடன் முகாம் அமைக்கும் பணியில் ஈடு பட்டிருந்த போது செவ்வாயன்று (ஜன.30) திடீரென சுற்றி வளைத்த நக்சலைட்டுகள் துணை ராணுவப் படை வீரர்களை நோக்கி சரமாரியாக சுட்டு, வெடிகுண்டுகளை வீசி உள்ளனர். இதில் தேவனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  இந்த நிலையில், தேவனின் உடல்  சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.