கிருஷ்ணகிரி, ஜூன் 22-
சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி, மாதந்திர உதவித்தொகை பெற ஆணை மற்றும் இருசக்கர நாற்காலி உள்ளிட்டவற்றை கிருஷ்ணகிரி ஆட்சியர் வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், எண்ணே கொள்புதூரை அடுத்த அம்னேரி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சென்றாயன். இவரது மனைவி சித்ரா. இவர், சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டுள் ளார்.
சித்ரா தனது தாய் மூலம், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 19 ஆம் தேதி நடந்த குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தார். அதில், சுவாச கோளாறால் பாதிக்கப் பட்டுள்ள மூச்சுவிட முடியாமல் மிகுந்த சிரமம் அடைந்து வருகிறேன். கூலிவேலை செய்யும் எனது கணவரால், 10 லிட்டர் ஆக்சிஜன் செறிகூட்டும் கருவி வாங்கும் அளவிற்கு வசதியில்லை. எனவே எனக்கு ஆக்சிஜன் செறிகூட்டும் கருவி, உதவித்தொகை வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அம்மனுவின் மீது உடனடியாக நடவடிக்கையாக, மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு நேற்று அம்னேரி கிராமத்தில் உள்ள சித்ரா வீட்டிற்கு நேரடியாகச் சென்று, ரூ.1 லட்சம் மதிப்பிலான 10 லிட்டர் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி, மாதாந்திர உதவித் தொகை ரூ.1500 பெறுவதற்கான ஆணை மற்றும் இரண்டு சக்கர நாற்காலி உள்ளிட்டவை வழங்கினார்.