சென்னை, ஏப். 10- சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களிடமிருந்து போக்கு வரத்து காவல்துறையினர் 9 கோடி ரூபாய்க்கு அபராதம் வசூலித்துள்ளனர். பெருநகர காவல்துறை விபத்தை குறைக்கும் வண்ணம் வாகனச் சட்டத்தை கடுமையாக அமலாக்கம் செய்வதால் விபத்துகள் குறைத்து வருகிறது. சாலை விபத்துக்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று குடிபோதையில் வாகனம் ஓட்டுவதாகும். எனவே குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு சட்டத்தில் கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது. அபராதத் தொகை ரூ.10,000 அதிகமாக இருப்பதால் பலர் அபராதத்தைச் செலுத்துவதில்லை. நீதிமன்றத்தில் உள்ள மெய்நிகர் பிரிவிலிருந்து அவர்களின் தொலைபேசி எண்களுக்கு அழைப்பு வந்தாலும் அபராதம் செலுத்துவதில்லை. மேலும் 8,119 குடி போதை வழக்குகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன. எனவே, இதுபோன்ற விதி மீறுபவர்க ளுக்கு நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து சென்னை பெருநகரில் 10 இடங்களில் அமைந்துள்ள அழைப்பு மையங்கள் மூலம் தகவல் தெரிவித்து, கடந்த 8ஆம் தேதி அவர்களை நேரில் வரவழைத்து வழக்குகளை முடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த சிறப்பு நடவடிக்கையின் மூலம் 661 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு அபராதத் தொகையாக ரூ.68,17,400 வசூ லிக்கப்பட்டன. கடந்த 2 மாதங்களில் அழைப்பு மையங்கள் மூலம் நிலுவையில் இருந்த 8,674 குடி போதை வழக்குகள் தீர்க்கப்பட்டு, ரூ.8,97,27,400 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது. மேலும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் சம்பந்தப்பட்ட வாகனம் மட்டுமின்றி, வேறு எந்த வாகனங்களாக இருந்தாலும், அசையும் சொத்துக்கள் உட்பட பறிமுதல் செய்ய நீதிமன்றங்களில் ஆணை பிறப்பிக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது. ஏற்கனவே, இது போன்று குடிபோதையில் வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் அசையும் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு 361 நீதிமன்ற ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.