சென்னை, பிப். 1- வணிகர்களுக்கும், தொழில் துறை யினருக்கும் ஏமாற்றம் தரும் மத்திய அரசின் பட்ஜெட் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசின் 2023-24-ஆண்டிற்கான பட்ஜெட்டில் மாநிலங்களுக்கான 50 ஆண்டு வட்டியில்லா கடன் தொடரும் என்பதும் மகிழ்ச்சிக்குரியது. இவை அனைத்தும் பிரதானமானதாக இருந்தும், அரசின் வருவாய்க்கு பிரதானமாக உள்ள வணிகர்களின் நலனுக்கான திட்டம் எதுவுமே பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. வணிகர்கள் மற்றும் தொழில் துறையினர்களுக்கான செயல்திட்டங்களோ, அவர்களின் மேம்பாட்டிற்கான திட்டங்களோ அறி விக்கப்படவில்லை. உயர்ந்துவரும் அரசின் ஜி.எஸ்.டி மற்றும் நேரடி வரிவருவாய் 64 விழுக்காடு வணிகர்கள் மூலமாகவே அரசிற்கு வந்து கொண்டிருக்கிறது. அரசின் வரி வருவாய் உயர்ந்து கொண்டிருக்கும் தருணத்தில் வணிகர்களின் வாழ்வாதார உயர்விற்கான திட்டங்களோ, வணிகர்களின் முன்னேற்றத்திற்கும் மேம்பாட்டிற்கும் எவ்வித அறிவிப்புகளும் இல்லை. ஒரே இந்தியா, ஒரே வரி எனும் முழக்கத்திற்கு இடையே, ஒரே இந்தியா ஒரே உரிமம் என்கிற நடைமுறை அமலாக்கப்படாதது மிகப்பெரும் ஏமாற்றத்தை அளிக்கின்றது. மேலும், ஒரே நாடு ஒரே வரி, அதுவும் 10 சதவிகித வரியே என்று அறிவிக்காமல் தேசிய வணிகர்நல வாரியம் ஒன்றிய அரசால் இன்றுவரை செயல்முறைக்கு கொண்டுவரப்படாமல் இருப்பதும் வேதனைக்குரியது. வணிகர்களுக்கான ஓய்வூதிய நடைமுறை என்ற அறிவிப்பை அறிவிப்போடு நிறுத்தி வைத்து, ஒட்டு மொத்த தேசிய வருவாயை ஈட்டித் தந்துகொண்டிருக்கும் வணிகர்களுக்கும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் வணிகர்களின் குடும்ப நலனிற்கும் நடை முறைப்படுத்திட நடவடிக்கை எடுக்காதது வணிகர்கள், தொழில் துறையினர் இடையே ஒட்டுமொத்த ஏமாற்றத்தையே அளித்திருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.