ஆலந்தூர்,மார்ச் 13- வேளச்சேரியில் இருந்து ஆதம்பாக்கம் வரை பறக்கும் ரயில்திட்ட பணிகள் முடிக்கப்பட்டு 4 மாதத்தில் ரயில் செல்ல தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரன் தெரிவித்துள்ளார். சென்னை ஆலந்தூர் மண்டலம் சார்பில் ரூ.50 கோடியே 89 லட்சம் மதிப்பில் பல்வேறு பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா திங்களன்று நடைபெற்றது. மண்டல குழு தலைவர் என். சந்திரன் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு பல்வேறு பணிகளை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்னும் 3 முதல் 4 மாதத்திற்குள் பரங்கிமலை வரை முழுவதுமாக கட்டி முடிக்கப்படும். வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை பறக்கும் ரயில் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் ஆலந்தூர் மண்டல அலுவலர் பாஸ்கரன், வட்ட செயலாளர் கே.ஆர்.ஜெகதீஸ்வரன், நடராஜன், ஆலந்தூர் மண்டல இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுதாபிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.