சென்னை, ஏப். 22 - தெருக்களின் பெயர் பலகைகளில் போஸ்டர் ஒட்டி விளம்பரம் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. மாநகராட்சி பகுதிகளில் தூய்மையை பராமரிக்கும் வகையில் திடக்கழிவுகளை அகற்றுதல், சாலை மையத் தடுப்புகளில் செடிகள் நடுதல், பாலங்களில் செங்குத்துப் பூங்காக்கள் அமைத்தல் போன்ற அழகுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசு மாநகராட்சி கட்டடங்கள், பேருந்து நிறுத்த நிழற்குடைகள், பாலங்கள் உட்பட பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் அகற்றப்பட்டு வண்ண ஓவியங்களால் அழகுப்படுத்தப்பட்டு வருகின்றன. அனைத்து தெருக்கள் மற்றும் சாலைகளிலும் பெயர் பலகைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள தெருக்களின் பெயர் பலகைகள் மற்றும் இனி அமைக்கப்பட உள்ள பெயர் பலகைகளில் சுவரொட்டிகள் மற்றும் இதர விளம்பரங்களை மேற்கொள்ளும் நபர்கள் மற்றும் நிறுவனங்களின் மீது தமிழ்நாடு திறந்தவெளி இடங்கள் பாதுகாப்பு சட்டதின் படி காவல் நிலையங்களில் புகார் அளித்து சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, பொதுமக்கள் மாநகராட்சியின் இந்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு மாநகராட்சி செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.