districts

img

46 அடியை எட்டியது வீராணம் ஏரி: விவசாயிகள் மகிழ்ச்சி

சிதம்பரம், நவ.20- கடலூர் மாவட்டம், காட்டு மன்னார்கோவில் அருகே வீராணம் ஏரி உள்ளது.டெல்டா பகுதி விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமாக இந்த ஏரி விளங்கி வருகிறது. கடலூர் மாவட்டத்தின் மிகப் பெரிய நீர் ஆதாரமாக இந்த ஏரி உள்ளது. இந்த ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்த ஏரியின் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும்.காவிரி நீர் மேட்டூர் அணையில் இருந்து கல்லணைக்கு வந்து அங்கிருந்து அணைக்கரையில் கொள்ளிடம் ஆற்றில் அமைந்துள்ள கீழணைக்கு வரும். கீழணையில் இருந்து வட வாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்படும். மழைக்காலங்களில் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், அரியலூர், கடலூர் மாவட்டங்களில் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் பெய்யும் மழை செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை மற்றும் காட்டாறுகள் மூலம் ஏரியை வந்தடையும். இந்த ஆண்டு மேட்டூர் அணை தண்ணீர் இல்லாமல் மூடப்பட்டது. இதனால் ஏரிக்கு நீர்வரத்து இல்லாமல் ஏரியின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது.தற்போது கடலூர் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. இதனால் வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. வினாடிக்கு 59 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் வீராணம் ஏரி 46 அடியை எட்டியது. ஏரியில் இருந்து சென்னைக்கு விநாடிக்கு 59 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.வீராணம் ஏரி நிரம்பி வருவதால் ஏரியில் இருந்து பாசனம் பெறும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் 16 ஏரிகள் முழுமையான கொள்ளளவை எட்டியுள்ளது. 16 ஏரிகள் 75 விழுக்காடு, 40 ஏரிகள் 50 விழுக்காடு நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.