விழுப்புரம்,அக்.29- நிலத்தகராறில் விவசாயியை அடித்துக்கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையத்தை அடுத்த அக்கராப்பாளையத்தை சேர்ந்தவர் விவசாயி ஆசைத்தம்பி (52). இவ ருக்கும் ஊத்தோடைகாடு காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த வேலாயுதம் குடும்பத்திற்கும் நிலத்தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று ஆசைத்தம்பி, தனது வயலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்துக்கொண்டிருந்தார். அப்போது, வேலாயுதம், அவரது மகன் சார்லஸ் (19), அவரது சகோதரர் சேவியர், அவரது மனைவி சகாயமேரி ஆகியோர் ஆசைத்தம்பியை வழி மறித்து சாதி பெயரை சொல்லி திட்டியதோடு உருட்டுக் கட்டையாலும், கடப்பாறையாலும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த ஆசைத்தம்பி சம்பவ இடத்திலேயே பலி யானார். இதுகுறித்த புகாரின்பேரில் சார்லஸ், சேவியர், வேலாயுதம், சகாயமேரி ஆகியோர் மீது கச்சிராயப்பாளையம் காவல் துறையினர், கொலை வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் வெள்ளியன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பாக்யஜோதி, குற்றம் சாட்டப்பட்ட சார்லசுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தும், மற்ற 3 பேரை இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்தும் தீர்ப்பு கூறினார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட சார்லஸ், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.