வந்தவாசி, டிச. 10- வந்தவாசி - ஆரணி நெடுஞ்சாலையில் காற்றுடன் பெய்த மழையில் வேரோடு மரம் சாய்ந்தது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி - ஆரணி நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணிக்காக, இருபுறங்களிலும் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு காற்றுடன் பெய்த மழையால் சாலையோரம் இருந்த ஒரு மரம் சாலையின் குறுக்கே சாய்ந்தது. இதனால் மின்கம்பிகள் அறுந்து, 3 மின்கம்பங்கள் உடைந்து சேதமானது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த நெடுஞ்சாலைத்துறை, மின்வாரிய ஊழியர்கள் மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும் மின் கம்பங்களை சீரமைத்து மின் விநியோகத்தை வழங்கினர்.