districts

img

சூளகிரி அருகே இருளர் இன மக்களின் சுடுகாடு நிலம்,பாதை ஆக்கிரமிப்பு

கிருஷ்ணகிரி, செப்.9- கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி  வட்டம், சின்ன குத்தி கிராமத்தில் பழங்குடி இருளர் இனத்தை சேர்ந்த  45 குடும்பங்கள், பட்டியலினத்தை சேர்ந்த 10  குடும்பங்கள், மாற்று  சமூகத்தை சேர்ந்த சில குடும்பங்கள்  வசித்து வருகின்றன. மலை ஒட்டிய பகுதியில் பழங்குடி  இருளர் இன மக்களுக்கு 1.25 ஏக்கர் சுடுகாடு நிலம் நீண்ட நாள்  பயன்பாட்டில் இருந்து வந்தது. கடந்த சில ஆண்டுகளாக பெரும் பகுதி மாற்று சமூகத்தை சேர்ந்த  ஒரு குடும்பத்தால் ஆக்கிரமிக்கப் பட்டு, விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் பழங்குடி இருளர் இன மக்களின் சுடுகாட்டு பகுதி நிலம் வெகுவாக குறைந்துவிட்டது. போதிய இடவசதி இல்லை. இந்த நிலையில், 80 வயது முதியவர் முனியம்மாவின் உடலை அடக்கம் செய்வதற்கு சுடுகாட்டுக்கு சென்றனர்.  அப்போது, மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஆக்கிரமிப்பு குடும்பத்தினர், இந்த நிலம் எனக்கு சொந்தமானது. எனவே, இந்த வழியாக பிணத்தை எடுத்துச் செல்லக்கூடாது என்று தடுத்து நிறுத்தியுள்ளார்.  இதுகுறித்து, பட்டியலின மக்கள் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்  தலைவர்கள் முருகேசன், விஜய குமார் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரு தரப்புக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதையடுத்து, முனியம்மா உடலை பேரிகை செல்லும் சாலையின் நடுவில் வைத்து மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர். பிறகு, முனியம்மா உடலை புதைப்பதற்கு அனுமதித்தனர். இது குறித்து தமிழ்நாடு விவசாய  சங்க மாவட்ட தலைவர் முருகேசன்  கூறுகையில், “இருளர் மக்கள் சுடு காடு, பாதை ஆக்கிரமிப்பு மீட்டெடுக்க வேண்டும்” என்றார்.