சூளகிரி, மே 16-
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதி வளர்ந்து வரும் நகரமாகும். இங்கு தொழிற்சாலைகள், வீடுகள், அரசு பணிகளுக்காக அதிகளவில் சிமெண்ட் ஜல்லி கலவை லாரிகள் ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை, ஓசூர் - பேரிகை சாலை மற்றும் சூளகிரி - உத்தனப்பள்ளி சாலை என பல்வேறு சாலை வழியாகச் செல்கிறது.
லாரிகளில் அளவுக்கு அதிகமான கலவைகள் கொண்டு செல்வதால் சாலைகளில் வழிந்தவாறு ஜல்லி கற்கள் சிதறி விழுகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். எனவே ஜல்லி கலவைகள் ஏற்றிச் செல்லும் லாரிகள் சாலையில் ஜல்லிக் கற்கள் கொட்டாதவாறு தார்பாய்களை மூடி எடுத்துச் செல்ல வேண்டும். இல்லையென்றால் அந்த வாகனங்கள் மீது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.