சென்னை,பிப்.14- மூன்று பெட்டிகள் கொண்ட ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களின் முதல் தொகுப்பு ஆகஸ்ட் 2024 க்குள் சென்னை வரும் என தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் அமைப்பின் 2-ம் கட்ட திட்டத்தின் 118.9 கி.மீ.க்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக 2026-ம் ஆண்டு பூந்தமல்லி-பவர் ஹவுஸ் இடையே இந்த ஓட்டுநர் இல்லாத ரயில்கள் முதன்முதலில் இயக்கப் படவுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. தற்போது முதல் கட்டத்தில் நான்கு பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. 2ம் கட்டத்தில் மூன்று பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும் பின்னர் கூட்டம் அதிகரித்தால் ஆறு பெட்டிகள் கொண்ட ரயில்கள் இயக்கப்படும் என்றும் மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகளின் கூறியதாவது; மெட்ரோ ரயில் ஸ்ரீ சிட்டியில் இருந்து சென்னை வந்ததும், ரயில் பராமரிப்பு மற்றும் சோதனை நோக்கங்களுக்காக பூந்தமல்லியில் கட்டப் பட்டு வரும் பணிமனைக்கு கொண்டு செல்லப்படும். இழுவை சோதனை, பிரேக் சிஸ்டம், ரயில் கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை அமைப்பு, பயணிகள் தகவல் அமைப்பு மற்றும் ரயிலின் பல்வேறு அம்சங்கள் இதில் அடங்கும். பூந்தமல்லியில் உள்ள டிப்போவுக்குள் கட்டப்பட்டுள்ள தண்ட வாளத்தில் முதலில் சோதனை ஓட்டம் நடத்தப்படும். சிக்னலில் அமைப்பு வழங்கப்பட்ட பிறகு, அமைப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டு, ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்பதைச் சரிபார்க்க ரயில்கள் மீண்டும் சோதிக்கப்படும். இது குறைந்தது 10 அல்லது 12 மாதங்களுக்கு தொடரும்” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.