ராணிப்பேட்டை, நவ. 30 - ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் சர்வந்தாங்கல் ஊராட்சியை சேர்ந்த கூலி தொழிலாளி அருள்-பரிமளா தம்பதியின் 2வது மகன் ராகவேந்திரா (13). அரசுப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். நவம்பர் 18 அன்று உறவினருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட சாலை விபத்தில் படுகாயமடைந்தனர். ராணிப்பேட்டை சி.எம்.சி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலை யில் புதனன்று (நவ. 29) மூளைச்சாவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறுவனின் உடல் உறுப்புகள் தானம் செய்ய பெற்றோர் மற்றும் சகோதரர் முன்வந்தனர். இதையடுத்து, அச்சிறுவனின் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி மலர் வளையம் வைத்து கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ரூ. 50 ஆயிரம் நிதி வழங்கி பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். ஆற்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல். ஈஸ்வரப்பன் ரூ. 25 ஆயிரம் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ந. சுரேஷ், வருவாய் கோட்டாட்சியர் மனோன்மணி, ஒன்றியக் குழுத் தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் காந்திமதி பாண்டு ரங்கன், வட்டாட்சியர் வசந்தி, ஊராட்சி மன்றத் தலைவர் வசந்தி உள்ளிட்டு துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.