சென்னை, ஏப். 20 - சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை எனப்படும் தரிசனப்பகுதிக்கு பக்தர்களை அனுமதிப்பது குறித்து அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மண்டபத்தில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், கனகசபை மண்டபத்தில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்க உத்தரவிடக் கோரி கடலூரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு புதனன்று (ஏப்.20) விசாரித்தது. இதையடுத்து, கனகசபையில் இருந்து தரிசனம் செய்ய அனுமதிப்பது குறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டும். இந்த வழக்கில் எந்த பொதுநலனும் இல்லை எனவும் கூறிய நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்தனர்.